மகாராஷ்டிரா: சிவசேனா குறித்து மவுனம் - என்சிபியுடன் ஆலோசனை நடத்துவதாக மட்டும் காங். அறிவிப்பு
Recommended Video
டெல்லி: மகாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க ஆதரவு தொடர்பாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில் மகாராஷ்டிரா நிலவரம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸுடன் (என்சிபி) மேலும் ஆலோசனைகள் நடத்த இருப்பதாக மட்டும் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 105 இடங்களைப் பெற்ற பாஜகவை தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். ஆனால் பாஜக தலைவர்களோ பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதால் ஆட்சி அமைக்க முடியாது என ஆளுநரிடம் தெரிவித்துவிட்டனர்.
இதனையடுத்து 2-வது தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது.
மத்திய அமைச்சர் ராஜினாமா
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் இருந்து சிவசேனா விலகினால் ஆதரவு தருவது குறித்து பரிசீலிப்போம் என்பது தேசியவாத காங்கிரஸின் நிபந்தனை. சிவசேனாவும் இதனை ஏற்றுக் கொள்ள முன்வந்துள்ளது. அக்கட்சியின் மத்திய அமைச்சர் அரவிந்த் சாவத் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.
சிவசேனாவுக்கு என்சிபி ஆதரவு
இதனால் சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கிடைக்கும் என தெரிகிறது. அதேநேரத்தில் சிவசேனா தலைமையிலான அரசுக்கு ஆதரவு தர காங்கிரஸில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
குழப்பத்தில் காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்கலாம் என கூறி வருகின்றனர். ஆனால் அக்கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் நிருபம், அப்படி ஒரு முடிவு எடுப்பது காங்கிரஸ் கட்சிக்குத்தான் பேரழிவு என சாடி வருகிறார். இதனால் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் நீடிக்கிறது.
டெல்லியில் ஆலோசனை
இந்நிலையில் மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்க டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிவசேனா அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
வெளியில் இருந்து ஆதரவு?
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் மாலையில் கூடி ஆலோசனை நடத்தினர். டெல்லியில் சோனியாவின் இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. இதில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவது என காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேரங்கள் முடிவாகிறது?
மேலும் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றால்தான் தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தரும் எனவும் கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் சிவசேனாவுக்கு முதல்வர் பதவி; தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்கின்றன மும்பை தகவல்கள்.
மாலை ஆலோசனை
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் மாலையில் மீண்டும் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பின்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து செயற்குழு கூட்டம் விவாதித்தது. மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் தலைவருடன் சோனியா காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மகாராஷ்டிரா நிலவரம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸுடன் மேலும் ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவசேனா ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.