ஆம்பன் புயல் பாதிப்பு சேதம்: மே.வங்கம், ஒடிஷாவில் சேதத்தை பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார்
டெல்லி: மேற்கு வங்கம் மற்றும் ஒடிஷாவை நிலைகுலைய வைத்த ஆம்பன் (அம்பன், உம்பன்) புயல் ஏற்படுத்திய சேதங்களை பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) பார்வையிடுகிறார்.
வங்கக் கடலில் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் சூப்பர் புயல் உருவானது. ஆம்பன் (அம்பன், உம்பன்) என பெயரிடப்பட்ட இந்த புயல் புதன்கிழமையன்று மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடந்தது.
மேற்கு வங்கத்தில் புதன்கிழமை பகலில் கரையை கடக்க தொடங்கிய இந்த புயல் சுமார் 4 மணிநேரம் உக்கிரமாக கோர முககத்தை காட்டியது. இதனால் ஒடிஷா, மேற்கு வங்க மாநிலங்கள் நிலைகுலைந்து போயுள்ளன.
இரவு நேர ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்- மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
ஆம்பனால் 72 பேர் பலி
ஒடிஷாவின் கடலோர மாவட்டங்களில் மிக மோசமான பாதிப்பை ஆம்பன் புயல் ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் ஆம்பன் புயல் ஆட்டுவித்தது. கொல்கத்தா பெருநகரமே சிதிலமடைந்து போயுள்ளது. இங்கு மட்டும் 19 பேர் பலியாகி உள்ளனர். ஆம்பன் புயலால் மொத்தம் 72 பேர் வரை பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பார்வையிட்ட நவீன்
ஒடிஷா, மேற்கு வங்கத்தில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் முழுவீச்சில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒடிஷாவில் முதல்வர் நவீன்பட்நாயக் சேதப் பகுதிகளை விமானம் மூலம் பார்வையிட்டார். ஒடிஷாவை விட மேற்கு வங்க மாநிலத்தில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது மேற்கு வங்க அரசுக்கு உதவுவதாக ஒடிஷா அரசும் கை நீட்டியுள்ளது.
கொரோனாவை விட கொடூரம்
கொரோனாவை விட கொடூரமான பாதிப்பை ஆம்பன் புயல் ஏற்படுத்தி உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி குறிப்பிட்டிருந்தார். புயல் சேத மீட்புகள் தொடர்பாக ஒடிஷா, மேற்கு வங்க மாநில முதல்வர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி இருந்தார். இரு மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் எனவும் கூறி இருந்தார்.
வெள்ளியன்று மோடி பார்வை
இந்த நிலையில் ஆம்பன் புயல் சேத பாதிப்புகளை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமையன்று பார்வையிடுகிறார். விமானம் மூலம் இரு மாநிலங்களிலும் புயல் பாதிப்பு இடங்களை மோடி பார்வையிடுகிறார். பின்னர் இரு மாநில முதல்வர்களுடன் மீட்பு பணிகள் குறித்தும் மோடி ஆலோசனை நடத்துகிறார்.