ஃபானி புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது... முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
டெல்லி: வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல் இன்று அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் எதிரொலியாக தமிழகத்தின் வடகடலோர பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு தென்கிழக்கே 690 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. 36 மணி நேரத்தில் மிக அதி தீவிரப்புயலாக மாறி நாளை மாலை ஒடிசா கடற்பகுதியை ஃபானி நெருங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒடிசாவை ஃபானி புயல் தாக்கக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கை குழுவின் 20 பிரிவுகள் தவிர, மாநிலத்தில் உள்ள 880 புயல் மையங்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுவின் 12 குழுக்கள், 335 தீயணைப்புப் படை பிரிவினர் என அனைத்தும் எச்சரிக்கையுடன் தயாராக உள்ளது.
முன்னதாக, நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ஃபானி புயல் காரணமாக தமிழகத்தின் வட கடலோர பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார். இன்று முதல் மூன்று நாளைக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இலங்கை குண்டுவெடிப்பு.. கேரளாவில் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர் கைது.. என்ஐஏ அதிரடி!
ஃபானி புயல், அதீவிர புயலாக மாறும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் அதிகாரிகள் தொடர்பில் இருக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். அனைவரும் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருக்க இறைவனை பிரார்த்திப்பதாக மோடி கூறியுள்ளார்.