2018 கஜா புயல் போல...வங்க கடலில் உருவாகி கரையை கடந்த 'குலாப்' அரபிக் கடலில் 'ஷகீன்' புயலாக வாய்ப்பு!
டெல்லி: வங்கக் கடலில் உருவாகி ஆந்திரா-ஒடிஷா இடையே கரையை கடந்த குலாப் புயல் வலுவிழந்த நிலையில் அரபிக் கடல் நோக்கி நகருகிறது. அரபிக் கடலில் குறைந்த காற்ற தாழ்வுநிலையாக மாறி ஓமன் கடற்பரப்பை நோக்கி நகர்ந்து ஷகீன் என்கிற புதிய புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
வங்க கடலில் செப்டம்பர் மாதம் புயல்கள் உருவாவது அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. வங்க கடலில் உருவான புதிய புயலுக்கு குலாப் என பெயரிடப்பட்டது. இந்த பெயரை பாகிஸ்தான் பரிந்துரைத்திருந்தது.
குலாப் புயல் புண்ணியத்தால் குமரியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை - கேரளாவில் ரெட் அலெர்ட்
கரையை கடந்த குலாப் புயல்
குலாப் புயல் நேற்று முன்தினம் இரவு வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிஷா இடையே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. கரையை கடந்த குலாப் புயல் தற்போது அரபிக் கடல் நோக்கி நகருகிறது.
அரபிக் கடல் நோக்கி செல்லும் குலாப்
அதாவது தெற்கு சத்தீஸ்கர், வடக்கு தெலுங்கானா, மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியம் வழியாக அரபிக் கடல் நோக்கி புயலின் பாதை இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடலை சென்றடையும் வலுவிழந்த நிலையில் சென்றடையும் குலாப் புயல் அங்கு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையாக மாறக் கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.,
Recommended Video
அரபிக் கடல் டூ ஓமன் -ஷகீன் புயல்
அரபிக் கடலில் புதிய குறைந்த காற்றழுத் தாழ்வுநிலையாகி ஓமன் கடற்பரப்பை நோக்கி நகரக் கூடும். ஓமன் கடற்பரப்பில் ஷகீன் என்ற புதிய புயலாக வலுவடையவும் வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது குலாப் புயல் வலுவிழந்த நிலையில் நகர்ந்தாலும் கூட தெலுங்கானாவில் கனமழை கொட்டி தீர்க்கிறது. இதனால் தெலுங்கானாவில் அனைத்து அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்ட்டுள்ளன. தெலுங்கானாவின் 14 மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது.
கஜா புயல் போலவே...
பொதுவாக வங்க கடலில் உருவாகும் புயல்கள் அரபிக் கடலுக்கு சென்று புதிய புயலாக உருவாவது இல்லை. அப்படியான நிகழ்வுகள் மிக மிக அரிதானது என்கின்றனர் வானிலை மைய அதிகாரிகள். கடந்த 2018-ம் ஆண்டு தமிழகத்தை ஒரு வார காலம் புரட்டிப் போட்ட கஜா புயலின் வடுக்கள் அவ்வளவு எளிதாக மறக்கக் கூடியது அல்ல. வங்கக் கடலில் உருவாகி கரையை கடந்த கஜா புயல் வலுவிழந்த நிலையில் அப்படியே தமிழகத்தின் உள்மாவட்டங்களில் நுழைந்தது. புதுக்கோட்டை மற்றும் புயலையே பார்க்காத திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை நிலைகுலையச் செய்தது கஜா புயல். பின்னர் வலுவிழந்த நிலையில் உதகையை தாண்டி அரபிக் கடல் நோக்கி சென்று அங்கு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையாக மாறியது. அதே போலவே இப்போது குலாப் புயலும் அரபிக் கடலுக்கு நகர்ந்து ஓமன் கடற்பரப்பில் புதிய புயலாக மாற உள்ளது என்கின்றனர் வானிலை மைய அதிகாரிகள்.