இடதுசாரிகளின் ஒற்றுமை... சாதிப்பாரா இ.கம்யூ புதிய பொதுச்செயலர் டி. ராஜா?
டெல்லி: இடதுசாரி கட்சிகளின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகி உள்ள நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் தமிழரான டி.ராஜா.
வேலூர் மாவட்டம் சித்தாதூரில் துரைசாமி- நாயகம் தம்பதியினருக்கு 1949-ம் ஆண்டு ஜூன் 3-ந் தேதி பிறந்தவர் டி.ராஜா. இளம்வயது முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார்.
25 ஆண்டுகளாக அக்கட்சியின் தேசிய செயலராக அவர் இருந்து வந்தார். எளிமையான அரசியல் வாழ்வுக்கு சொந்தக்காரர். இந்துத்துவா கொள்கையை மிக கடுமையாக விமர்சிக்கக் கூடியவர்.
தமிழக ராஜ்யசபா எம்.பி
தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ராஜா, Dalit Question, The Way Forward: Fight Against Unemployment, a booklet on unemployment உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். தமிழ், ஆங்கில பத்திரிகைகளில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
கோட்டைகளை கைவிட்ட இடதுசாரிகள்
ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சிகளுக்கு துணை நின்றவர். தற்போதைய சூழலில் இடதுசாரிகள் செல்வாக்கு பெரும் சரிவை சந்தித்துள்ளது. இடதுசாரிகளின் கோட்டையான திரிபுரா, மேற்குவங்கம் இப்போது இந்துத்துவா கொள்கை பேசும் பாஜகவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. கேரளாவிலும் தமிழகத்திலும் மட்டும்தான் இடதுசாரி கட்சிகள் உயிர்ப்புடன் இருக்கின்றன.
இடதுசாரிகளில் உயர்ஜாதி ஆதிக்கம்
இடதுசாரிகளின் இந்த பேரழிவுக்கு உயர் ஜாதி இந்துக்களின் பிடியில் கட்சித் தலைமை இருந்து வந்தது. அதனால் சித்தாந்தத்தை பற்றி சிந்திக்காமல் இந்துத்துவாவை நோக்கி மேற்குவங்கத்தில் அவர்களால் நகர முடிந்தது.
சமூக நீதி, மாநில உரிமைகளுக்கு எதிர்ப்பு
சமூக நீதி, மாநில உரிமைகள் சார்ந்த விஷயத்தில் பல நேரங்களில் பாஜக. காங்கிரஸுடன் கை கோர்த்துக் கொண்டு எதிராக நின்றன இடதுசாரி கட்சிகள். அண்மையில்கூட உயர்ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் வழங்க ஆதரவு தெரிவித்து கடும் விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கின்றனர் இடதுசாரிகள்.
புதிய கண்ணோட்டம்
தற்போதைய சூழலில் மண்ணுக்கேற்ற மார்க்சியம் தேவை என்கிற விவாதம் இடதுசாரிகளிடையே எழுந்துள்ளது. அதேபோல் பிரிந்து கிடக்கும் இடதுசாரி கட்சிகளை மீண்டும் ஒரே கட்சியாக்க வேண்டும் என்கிற குரல்களும் எதிரொலித்து வருகின்றன. இதை தீவிரமாக வலியுறுத்தி வந்தவர் டி.ராஜா.
இத்தகைய ஒரு சவாலான சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராகியிருக்கிறார் டி.ராஜா. மார்க்சியத்தையும் பெரியாரியலையும் உள்வாங்கிய தீவிர சிந்தனையாளரான டி.ராஜா தமது பொறுப்பு காலத்தில் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தையும் இடதுசாரிகளின் ஒற்றுமையையும் சாதிப்பாரா? என்கிற பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.