20 ஆண்டுகளில் 40 முறை பந்தாடப்பட்ட ரூபா ஐபிஎஸ்.. உமா பாரதி முதல் சசிகலா வரை அதிரடி காட்டியவர்!
டெல்லி: சசிகலாவுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து உண்மையை வெளியே கொண்டு வந்த ரூபா ஐபிஎஸ் தனது 20 ஆண்டு பணிகாலத்தில் 40 முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு விஐபி சலுகைகள் வழங்க டிஜிபி சத்தியநாராயண ராவிற்கு ரூ 2 கோடி லஞ்சம் பேசப்பட்டதாக மர்ம முடிச்சுகளை ரூபா ஐபிஎஸ் அவிழ்த்தார்.
இதையடுத்து கர்நாடக சிறைத் துறையின் முதல் பெண் போலீஸ் அதிகாரியான இவர் உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
புது சர்ச்சை.. சசிகலா மீது குற்றம் சுமத்தினாரே.. ரூபா ஐபிஎஸ்.. பவர்ஃபுல் பதவியிலிருந்து டிரான்ஸ்பர்
ஐபிஎஸ் அதிகாரி
இதையடுத்து அவர் கர்நாடகத்தின் முதல் பெண் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் மற்றொரு ஐபிஎஸ் அதிகாரியான ஹேமந்த் நிம்பால்கர் மீது ஊழல் புகாரை முன் வைத்தார். இவர் உள் பாதுகாப்புத் துறைக்கு மாற்றப்படுவதற்கு முன்னர் பெங்களூரில் கூடுதல் ஆணையராக பதவி வகித்தார்.
ரூ 619 கோடி
அப்போது நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ 619 கோடியை முறைகேடு செய்ததாக நிம்பால்கர் மீது ரூபா அதிரடியாக குற்றம்சாட்டினார். இதனால் இருவருக்கும் இடையே பனிப்போர் நடந்து வந்தது. இந்த நிலையில்தான் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கர்நாடகா கைவினை பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக ரூபா அதிரடியாக மாற்றப்பட்டார்.
இரண்டு மடங்கு
இதுகுறித்து ரூபா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் எனது பணிக்காலத்தை விட இரண்டு மடங்கு நான் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளேன். உண்மைகளை வெளிக்கொணர்வதால் இந்த நடவடிக்கைகள் இருக்கலாம். ஆனால் தொடர்ந்து நான் எனது பணியை சமரமின்றி செய்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.
கைது
கர்நாடகாவின் பின் தங்கிய மாவட்டமான யாதவகிரியில் முதல்முறையாக ரூபா பணி நியமனம் செய்யப்பட்டார். 20 ஆண்டுகளில் அவர் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ள வட கர்நாடகாவிலும் பணியாற்றியுள்ளார். இது அரசு ஊழியர்களுக்கு தண்டனை பகுதியாக கருதப்படுகிறது. 2004-ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக இருக்கும் உமா பாரதியை சர்ச்சைக்குரிய உப்பள்ளியில் ஈத்கா மைதானத்தில் கொடி ஏற்ற முயற்சித்த போது அவரை துணிந்து கைது செய்தார் ரூபா.
பந்தாடப்படும் ரூபா
அது போல் மற்றொரு மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் தொடர்புடைய முன்னாள் எம்எல்ஏவை கைது செய்து சிறையில் அடைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். நேர்மையான அதிகாரிகள் வளைந்து கொடுக்காவிட்டால் பந்தாடப்படுவர் என ரூபா தெரிவித்திருந்தார்.