எல்லையில் சீனா தொல்லை.. அதிரடியாக அமெரிக்காவிடம் ரூ. 2,290 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கும் இந்தியா
டெல்லி: அமெரிக்காவிடம் இருந்து ரூ. 2,290 கோடி செலவில் முப்படைகளை வலுப்படுத்தும் வகையில் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கு டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதன்படி ராணுவத்துக்கு 72 ஆயிரம் சிக் சாயர் தானியங்கி துப்பாக்கிகள் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.780 கோடியில் இந்த துப்பாக்கிகள் வாங்கப்படுகிறது. மேலும், இந்திய கடற்படை மற்றும் விமானப்படைகளுக்கு தேவையான இலக்கை நோக்கி துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆயுதங்கள் ரூ.970 கோடி மதிப்பீட்டில் வாங்குவதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு 2019ல் அமெரிக்காவிடம் இருந்து ரூ. 700 கோடி மதிப்பில், 72,400 தானியங்கி துப்பாக்கிகள் வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்த துப்பாக்கிகள் அனைத்தும் அமெரிக்காவிடம் இருந்து இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளது.
மேலும் இந்திய ராணுவத்துக்கு, விமானப்படைக்கு தடையில்லாமல் ரேடியோ தகவல்களை பெறும் வகையில் ரூ.540 கோடிக்கு எச்.எப். டான்ஸ் ரிசீவர் கருவிகள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாட்டையே நம்பிக்கொண்டிருப்பது ஆபத்தானது.. சீனாவுக்கு மறைமுக குட்டு வைத்த மோடி
சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே எல்லையில் கிழக்கு லடாக்கில் பதற்றம் நிலவி வருகிறது. இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. இருதரப்பிலும் ஆயுதங்கள் குவிக்கப்பட்டு வருகிறது. குளிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்கள் கருதி மேலும் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு இந்தியா முடிவு செய்து இருக்கிறது.