அன்று தலாய் லாமாவுக்கு நேரு அடைக்கலம் கொடுத்தார்.. இன்று வாழ்த்துவாரா பிரதமர் மோடி!!
டெல்லி: இந்தியா, சீனா எல்லையில் கல்வான் பகுதியில் இருநாட்டுப் படைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உரசல் ஏற்பட்டு இருக்கும் நிலையில் இன்று 85வது பிறந்த நாள் காணும் புத்த மதத் துறவியான தலாய் லாமாவை பிரதமர் மோடி வாழ்த்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திபெத் மீது சீனாவின் படையெடுப்பை பகிரங்கமாக எதிர்த்தவர் புத்த மதத் துறவியான தலாய் லாமா. ஆனால், இவரை சீனா கடுமையாக ஒடுக்க நினைத்தது. தலாய் லாமா தங்கியிருக்கும் அரண்மனை மீதும் தாக்குதல் நடத்தியது. அவரை கைது செய்து சிறைப்படுத்த 1958- 1959ல் சீனா முயற்சித்தது.
இதையடுத்து அங்கிருந்து தலாய் லாமா தப்பி 31 நாட்கள் நடைபயணத்திற்குப் பின்னர் இந்தியாவுக்குள் நுழைந்தார். 1959 ஆம் ஆண்டு, ஏப்ரல் 18 ஆம் தேதி இந்தியாவுக்குள் நுழைந்த தலாய் லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது. அவருக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது என்று சீனா மிரட்டல் விடுத்தது. தலாய் லாமாவை ஒப்படைக்க வேண்டும் என்று அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு சீனா கோரிக்கை வைத்தது. ஆனால், நேரு மறுத்துவிட்டார்.
இன்று 85வது பிறந்த நாளை முன்னிட்டு இவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து குவிந்து வருகிறது. சர்வதேச அளவில் மணல் ஓவியத்துக்கு புகழ் பெற்ற சுதர்சன் பட்நாயக் மணல் ஓவியத்தின் மூலம் தலாய் லாமாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திபெத் மத்திய நிர்வாகம் ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து ஜூன் 30, 2021 வரை தலாய் லாமாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ''இயர் ஆப் கிராடிடியூட்' கடைபிடிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திபெத்துக்கு தலாய் லாமா ஆற்றி இருக்கும் சேவையை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை திபெத் மத்திய நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
முக்கிய நிகழ்வாக தர்மசாலாவில் இருக்கும் நாடாளுமன்றத்தில் 50க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கூடி அவரது பிறந்த நாளை கொண்டாடுவார்கள் என்று தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து இருப்பதால், குறைந்த அளவில் கூடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
சீனாவுக்கு எதிராக டிரண்டாகும் ''ப்ரீ திபெத்''து.. தலாய் லாமாவுக்கு குவியும் பிறந்த நாள் வாழ்த்தும்!!
திபெத் விடுதலையை குறிக்கும் வகையிலும், திபெத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பை குறிக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் இவரது பிறந்த நாள் உலக திபெத் நாள் என்று கொண்டாடப்பட்டு வருகிறது.
வாழ்த்துவாரா மோடி:
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் எல்லையில் பதட்டம் நிலவி வரும் நிலையில், இன்று பிறந்த நாள் காணும் தலாய் லாமாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.