தலித்துகளுக்கு தேவை இட ஒதுக்கீட்டுடன் கூடிய ஐஜேஎஸ்.. கோரிக்கையில் தவறில்லை.. பாஸ்வான் ஆதரவு
டெல்லி: இந்திய ஆட்சிப் பணி, இந்திய போலீஸ் பணி போல இந்திய நீதித்துறை பணியை உருவாக்க வேண்டும். அதில் தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று தலித் எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் தவறு இருப்பதாக நான் கருவில்லை. அதை ஆதரிக்கிறேன் என்று மத்திய உணவு அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.
ராம் விலாஸ் பாஸ்வான் வீட்டில் வைத்து தலித் எம்பிக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது நீதிபதி உள்ளிட்ட நீதித்துறை பணிகளில் தலித் மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு தேவை என்ற கோரிக்கை அழுத்தமாக முன்வைக்கப்பட்டது. இதற்காக தனியாக இந்திய நீதித்துறை பணி உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.
இதுகுறித்து கூட்டத்திற்குப் பின்னர் ராம் விலாஸ் பாஸ்வான் செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது அவர் கூறுகையில், அனைத்து எம்பிக்களும் தலித்துகளுக்கு நீதித்துறை பணிகளில் தனி இட ஒதுக்கீடு தேவை என்ற கோரிக்கையை வைத்தனர். காரணம், ஒடுக்கப்பட்ட பிரிவினரின் வழக்குகள் நீதிமன்றத்திற்கு வரும்போது அதில் தேக்க நிலை ஏற்படுகிறது.
இதுமாதிரியான சிக்கலைத் தவிர்க்கவே இட ஒதுக்கீடு கோருகின்றனர் தலித்துகள். இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை என்று சுப்ரீம் கோர்ட் கூறியிருப்பது தலித் சமுதாயத்தினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ஏற்கனவே இந்திய ஆட்சிப் பணி, இந்திய போலீஸ் பணி நியமனங்கள், தேர்வுகளில் இட ஒதுக்கீடு உள்ளது. அதேபோல இந்திய நீதித்துறை பணியை உருவாக்கி இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று எம்பிக்கள் வலியுறுத்தினர்.
வெளிப்படையான நீதித்துறை தேவை, அது தற்போது இல்லை. எனவே இந்திய நீதித்துறை பணியை உருவாக்க வேண்டும். 2வது, அனைத்துப் பிரிவினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் நீதித்துறையில் இருக்க வேண்டும். இந்த இரண்டு கோரிக்கையை வைத்துத்தான் எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த கோரிக்கை நியாயமானதே. எனவே நான் அதை ஆதரிக்கிறேன்.
இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்திற்கும் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நீதித்துறை இட ஒதுக்கீடு குறித்து சாதகமான பதிலை நாடாளுமன்றத்திலும் மத்திய அரசு கொடுத்துள்ளது. இந்த விவகாரத்தை சீரியஸாகவே மத்திய அரசு அணுகும் என்றார் பாஸ்வான்.