தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு.. அணை பாதுகாப்பு சட்டம் இப்போது இல்லை
டெல்லி: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றாமல் ஒத்திவைக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சுமார் 5,200 பெரிய அணைகள் உள்ளன. 450 அணைகள் புதிதாகக் கட்டப்பட்டு வருகின்றன. இவை தவிர ஆயிரக்கணக்கான சிறு மற்றும் நடுத்தர அணைகளும் உள்ளன. ஒவ்வொரு அணையின் கட்டுப்பாடும் அந்தந்த மாநிலங்களில், உள்ளது.
ஆனால் இவை அனைத்தின் பாதுகாப்புக்கும் ஒரே மாதிரியான வழிமுறைகளை வகுக்க தேசிய அணை பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு கூறியது.
இந்த மசோதாவின்படி, அணை பாதுகாப்பிற்கான தரங்களை பராமரித்தல் மற்றும் அணை உடைதல் போன்ற பேரழிவுகளைத் தடுப்பது, அணை பாதுகாப்புக் கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் தேவையான விதிமுறைகளை பரிந்துரைத்தல் ஆகிய நோக்கங்களுக்காக மாநில பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்களுடன் கூடிய அணைக்கட்டுக்கான தேசிய குழு (என்சிடிஎஸ்) உருவாக்கப்படும்.
ஆபத்து காலங்களில் முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் நடைமுறையை நிறுவுதல் மற்றும் காப்பீட்டுத் தொகை மூலம் இழப்பீடுகளை வழங்குவதற்கான சாத்தியங்களை ஆராய்வது ஆகியவையும், இந்த மசோதாவில், அடங்கும்.
அணைக்கட்டுக்கான தேசிய குழுவின், கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவதற்கும், மாநிலங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், அணைகள் குறித்த தேசிய தரவு தளத்தை பராமரிப்பதற்கும் ஒரு ஒழுங்குமுறை அமைப்பு, தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும். இவ்வாறு அந்த மசோதாவில் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த வழக்குக்கு 98 நாட்கள் திகார் சிறையா.. ப.சிதம்பரத்தை சந்தித்த சசிதரூர் கேள்வி
ஆனால், இந்த மசோதாவால் தமிழகத்திற்கு பாதிப்பு அதிகம் ஏற்படும் என்பதால், நிறைவேற்றக்கூடாது என தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஏற்கனவே இதுபற்றி தமிழக முதல்வர் கடிதம் எழுதி கோரிக்கைவிடுத்திருந்தார். மேலும், தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் ஜெயக்குமார் டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்தனர். அப்போது அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றக் கூடாது, அப்படி செய்தால், நதிநீர் பங்கீட்டின்போது பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது, என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அணை பாதுகாப்பு மசோதாவை ஒத்திவைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால், தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு தற்காலிக வெற்றி கிடைத்துள்ளது.