மத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு?
டெல்லி: ஏர் இந்தியா, டோமினோஸ், பிக் பாஸ்கேட் ஆகிய தளங்களிலிருந்து திருடப்பட்ட தகவல்கள் மூலம் இந்திய உயர் அதிகாரிகளின் மெயில் ஐடிகளை ஹேக் செய்ய முயற்சிகள் நடப்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறித்தியுள்ளது.
Recommended Video
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஏர் இந்தியா, டோமினோஸ், பிக் பாஸ்கேட் ஆகிய தளங்களிலிருந்து பல லட்சம் இந்தியா பயனாளர்களின் தரவுகள் திருடப்பட்டன. இந்நிலையில், இதை வைத்து இந்திய உயர் அதிகாரிகளின் மெயில்களை ஹேக் செய்ய முயல்வதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள எச்சரிக்கை அறிக்கையில், @nic.in மற்றும் @gov.in என்று முடியும் மின்னஞ்சல் முகவரிகளைக் குறிவைத்து சைபர் தாக்குதல்கள் நடைபெறும் அபாயம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
பேலி தளம்
அதாவது முக்கிய உயர் அதிகாரிகளின் வாட்ஸ்அப் கணக்குகளுக்கும் மெசேஜ்களுக்கும் https://covid19india.in என்ற தளத்திற்குச் சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது குறித்த தகவல்களை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஆனால், அதை களிக் செய்தால் மத்திய அரசின் mygov.in என்ற தளத்தைப் போலவே இருக்கும் போலி தளத்திற்கு அழைத்துச் செல்கிறது.
தரவுகளைத் திருட முயற்சி
இது தொடர்பாக சைபர் ஆய்வாளர் ராஜ்ஷேகர் ராஜாஹாரியா கூறுகையில், இந்த இணையப் பக்கம் கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தானில் ஹேஸ்ட் செய்யப்பட்டது. அதிகாரிகளை நம்ப வைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் தங்கள் மெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்டுகளை பதிவிடும்போது, அதைத் திருடுகின்றனர். இதன் மூலம் முக்கிய தகவல்கள் இருக்கும் பக்கங்களை ஹேக் செய்ய முயல்வார்கள். அவர்கள் உருவாக்கிய பக்கம் அரசின் மெயில் ஐடிகளை மட்டுமே எடுத்துக் கொள்ளும். ஜிமெயில்.காம் போன்ற மெயில்களை ஏற்கவில்லை" என்றார்.
எச்சரிக்கை தேவை
ஏர் இந்தியா, டோமினோஸ், பிக் பாஸ்கேட் ஆகிய தளங்களிலிருந்து திருடப்பட்ட தகவல்கள் மூலம் இந்திய உயர் அதிகாரிகளின் மெயில்களை phishing மூலம் ஹேக் செய்ய முயற்சிகள் நடப்பதாகவும் இந்த லிங்குகளை அவர்கள் க்ளிக் செய்யும்போது அவர்களின் கணினிகள் அல்லது மின்னஞ்சல் கணக்குகள் ஹேக் செய்யப்படும் அபாயம் உள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுபோன்ற ஃபிஷிங் முயற்சிகள் வழக்கமான ஒன்று தான் என்றாலும் கடந்த ஒரு வருடத்தில் இது தீவிரமடைந்துள்ளது என்று ஒரு அரசு அதிகாரி கூறினார்.
சீனா முயற்சி?
முன்னதாக, சீன அரசின் பின்புலத்தில் இயங்கும் சில ஹேக்கர்கள் இந்திய மின் நிலையங்களைக் குறிவைத்துள்ளதாகக் கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு எச்சரித்தது. அதேபோல எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்தியாவிலுள்ள மின் நிலையங்களில் வைரஸ்களை சீன ஹேக்கர்கள் அப்லோட் செய்திருக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்களும் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியா உயரதிகாரிகளைக் குறிவைத்து நடக்கும் ஹேக்கிங் முயற்சி குறித்துக் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.