டெல்லி 2ம் நாள் கலவரத்தில்.. தப்பி செல்லும் போலீசாரை, மோசமாக தாக்கும் வன்முறை கும்பல்.. பகீர் வீடியோ
டெல்லி: டெல்லியில் 2வது நாள் வன்முறையின் போது போலீசார், வன்முறையாளர்களிடம் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள சாலை தடுப்புகளை தாண்டி குதித்து பாதுகாப்பான இடத்திற்கு சென்றார்கள். இது தொடர்பான வீடியோ காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
Recommended Video
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் முதல் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு டெல்லியின் சில பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் வெடித்தது.
இந்த போராட்டத்திற்கு சிஏஏ ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களும் போட்டியாக போராட்டத்தை தொடங்கினர். அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் இரு சமூகங்களுக்கு இடையிலான வன்முறையாக மாறியது.
48 பேர் உயிரிழப்பு
பிப்ரவரி 23 மற்றும் பிப்ரவரி 24 ஆகிய தேதிகளில் வடகிழக்கு டெல்லியின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. குறிப்பிட்ட பிரிவு மக்கள் மிக மோசமாக தாக்கப்பட்டனர். படம்பிடிக்க சென்ற செய்தியாளர்கள் உள்பட பலரும் தாக்கப்பட்டனர். இந்த வன்முறையில் சுமார் 48 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
கற்கள் வீச்சு
இந்நிலையில் வடகிழக்கு டெல்லி பகுதியில் நடந்த கலவரம் தொடர்பாக போலீசார் இரண்டு வீடியோக்களை வெளியிட்டு உள்ளார்கள். அந்த வீடியோக்களில் நூற்றுக்கணக்கான மக்கள் போலீசாரை சுற்றி வளைத்து தாக்கி உள்ளார்கள். கடந்த பிப்ரவரி 24ம்தேதி எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் போலீசார் குழுவாக அந்த சாலையில் இருக்கிறார்கள். அப்போது வன்முறை கும்பலைச் சேர்ந்த பலர் சாலையின் இருபுறம் இருந்த படி கற்களால் அவர்களை தாக்குகிறார்கள். அப்போது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள், இதையடுத்து சில நிமிடங்கள் அவர்கள் கலைந்து செல்கிறார்கள். ஆனால் அதன்பின்னர் சில வினாடிகளில் மீண்டும் அவர்கள் ஒன்று கூடி போலீசாரை தாக்குகின்றனர்.
|
போலீசார் தப்பி ஓட்டம்
அனைத்து பகுதியிலும் போலீசார் செல்ல வழியில்லாமல் தடுக்கப்பட்டு சுற்றி வளைத்து கற்களை வீசி தாக்குகிறார்கள். தொடர்ந்து அதிக அளவில் வன்முறையாளர்கள் கூடிக்கொண்டே சென்றதை பார்த்த போலீசார் தங்களை தற்காத்துக்கொள்ள சாலை தடுப்புகளை தாண்டி குதித்து செல்கிறார்கள். எனினும் அவர்களை விடாத வன்முறையாளர்கள் தொடர்ந்து கற்களையும் செங்கல்களையும் வீசுகிறார்கள்.
அமித் சர்மா காயம்
இந்த கூட்டத்தில் தான் காவல்துறை உயர் அதிகாரி அமித் சர்மா மற்றும் அனுஜ் குமார், தலைமை காவலர் ரத்தன் லால் உள்ளிட்டோர் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த வீடியோவில் அவர்கள் தெரியவில்லை. இந்த தாக்குதல் நடந்த அன்று தான் தலைமைக் காவலர் ரத்தன் லால் உயிரிழந்தார்.
பாதுகாப்பு வளையம்
இதனிடையே மற்றொரு வீடியோவில், காயமடைந்த மூத்த அதிகாரி அமித் சர்மா போலீசாரால் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு அழைத்து செல்லப்படுகிறார். அப்போது வன்முறையாளர்கள் கல் வீசுகின்றனர். தொடர்ந்து, அனுஜ் சர்மாவும் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுகிறார். இப்படியாக அந்த வீடியோ இருக்கிறது. டெல்லி வன்முறை தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.