குடியரசு தின டிராக்டர் பேரணி... உயிரிழந்த விவசாயிக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு
டெல்லி: குடியரசு தின டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயி உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் மீது டெல்லி காவல் துறையினர் 22 எஃப்ஐஆர்களை பதிவு செய்துள்ளனர்.
மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்த விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எவ்வித உடன்பாடுகளும் ஏற்படவில்லை.
மத்திய அரசு விவசாய சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று குடியரசு தினத்தன்று விவசாயிகள் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்தினர். அப்போது திடீரென்று அதில் கலவரம் ஏற்பட்டது. அப்போது டிராக்டர் கவிழ்ந்து விவசாயி ஒருவரும் இதில் உயிரிழந்தார்.
இது தொடர்பாக டெல்லி காவல் துறையினர் 22 எஃ.ப்.ஆர்களை பதிவு செய்துள்ளனர். டிராக்டர் கவிழ்ந்து உயிரிழந்த விவசாயிக்கு எதிராகவும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 80க்கும் மேற்பட்ட காவலர்களும் காயமடைந்தாக டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று இணைய வசதி துண்டிக்கப்பட்டது. இன்று காலை வரையிலும்கூட இணைய வசதி டெல்லியின் பல பகுதிகளில் மீண்டும் வழங்கப்படவில்லை. அதேபோல செங்கோட்டை மற்றும் ஜமா மஸ்ஜித் மெட்ரோ நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், தற்போது பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
செங்கோட்டையில் ஏற்பட்ட வன்முறைக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் பஞ்சாபி நடிகர் தீப் சித்து என்பவரின் தூண்டுதலாலேயே இந்த வன்முறை நடத்தப்பட்டுள்ளதாகவும் விவசாயச் சங்கத் தலைவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், விவசாயிகள் அனைவரும் தற்போது பழைய போராட்ட களத்திற்கு திரும்பிவிட்டதாவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.