1962ல் கை ஓங்கியிருக்கலாம்.. ஆனால் இப்ப அப்படி இல்லை..உணர்த்திய இந்தியா.. பின்வாங்கிய சீனா
டெல்லி: கல்வான் பள்ளத்தாக்கில் தனது ஆக்கிரமிப்புகளை கைவிட்டு, சீன ராணுவம் பின் நோக்கி சென்றுள்ளது. முன்பும் இதுபோல தகவல் வெளியான போதிலும் இப்போது சீன தரப்பும் இந்த தகவலை உறுதி செய்துள்ளதால் இதன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
Recommended Video
2017 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பூட்டான் நாடுகளிடையேயான டோக்லாம் பீடபூமி பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்தது. எதிராக இந்திய ராணுவத்தினரும் நிறுத்தப்பட்டனர். 73 நாட்களுக்கு பிறகு சீன ராணுவம் பின்வாங்கியது. இப்போது லடாக் எல்லையில் சீனா பிரச்சனை செய்ய ஆரம்பித்தது மே 5 இரவு அல்லது மே 6ம் தேதியன்று அதிகாலையில்தான். இதன்படி சரியாக இரண்டு மாதங்கள், அதாவது 60 நாட்கள் கழித்து சீனப் படை பின் வாங்கியுள்ளது.
டோக்லாம் வெற்றியை விடவும் மிக விரைந்து வெற்றியை இந்தியா பெற்றுள்ளது. 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததுதான் இதில் உச்சகட்ட சோகம்.
அடிபணிந்த சீனா.. எல்லையில் திடீரென பின்வாங்கியது ஏன்? சீன வெளியுறவுத்துறை கொடுத்த விளக்கம்!
சீனா அத்துமீறல்
ஜவஹர்லால் நேரு ஆட்சி காலத்தின் போது 1962ஆம் ஆண்டு இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் இடையே மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து பல பகுதிகளை கைப்பற்றியது. ஒரு கட்டத்தில் கொல்கத்தாவே, விழுந்துவிடும் என்று நினைக்கும் அளவிற்கு சீன ராணுவம் முன்னேறியது, வரலாறு படித்த அனைவரும் அறிந்த ஒன்று. இந்தியா மற்றும் சீனா ஆகிய மக்கள்தொகை பெருக்கம் கொண்ட இரு நாடுகளும் மத்திய ஆசியாவில் பொருளாதார மற்றும் ராணுவத்தில் முன்னேறிக் கொண்டிருந்த காலகட்டம் அது.
இந்தியா முன்னேற்றம்
ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தப் போவது யார் ஜனநாயக இந்தியாவா, கம்யூனிச சீனாவா என்று 1959ல் ஜான் கென்னடி தனது செனட் உரையில் உரையாற்றும் அளவுக்கு இரு நாடுகளும் வேகமாக முன்னேற தொடங்கியிருந்தன. அந்த நிலையில்தான் நேருவும், சீனாவுடன் மிகுந்த நட்பைப் பேண விரும்பினார். இரு நாட்டுத் தலைவர்களும், இருநாடுகளுக்கு இடையே அவ்வப்போது சென்று வந்தனர். ஆனால் நேருவிற்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டு சீனா திடீரென தாக்குதல் நடத்தி முன்னேறியது.
துரோகி சீனா
இந்த சம்பவத்திற்கு பிறகுதான் சீனாவை நம்பக்கூடாது என்ற எண்ணம் இந்திய சிறுவர்கள் மனதில் கூட ஆழமாக விழுந்துவிட்டது. ஒரு முறை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இந்தியா வந்திருந்த போது, பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் இவ்வாறு குறிப்பிட்டார். "இந்தியாவில் உள்ள இளம் சமுதாயத்தினரிடம் உங்களின் நட்பு நாடு எது என்று கேட்டால், ரஷ்யா என்றுதான் சொல்வார்கள். அந்த அளவுக்கு ரஷ்யா மீது இந்திய மக்கள் மிகுந்த நம்பிக்கையும் நட்பும் வைத்துள்ளார்கள்" என்றார். அவர் சொல்லாத ஒரு வார்த்தை இதுதான் "இந்தியாவில் உங்களுடைய துரோகி யார் என்று கேட்டால், அது சீனாதான் என்று சொல்வார்கள்" என்பதுதான். அதற்கு நேரு காலத்து சம்பவம் மிகப்பெரிய காரணம்.
டோக்லாம், லடாக்
ஆனால் இப்போது டோக்லாம் அல்லது லடாக் இரு இடங்களிலுமே, தனது பழைய யுத்தியை சீனாவால் முன்னேற முடியவில்லை. ஆம்.. இது 1962ம் ஆண்டில் இருந்த இந்தியா கிடையாது. நவீன இந்தியா என்கின்றனர் சர்வதேச விவகார துறை நிபுணர்கள். நேருவிடம் ஒரு தாராள குணம் உண்டு. எந்த ஒரு சண்டை சச்சரவிலும் இந்தியா இறங்கி விடக்கூடாது என்பதிலும் அவர் கவனம் செலுத்துவார். 1947 இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு கடுமையான பஞ்சத்துடன், உணவு பற்றாக்குறையுடனும் சிக்கி தவித்த காலகட்டம் அது. எல்லைப் பிரச்சினைக்காக மோதிக் கொண்டு நமது சக்தியை எல்லாம் இழந்து விடக்கூடாது. நாட்டின் வளர்ச்சிதான் முக்கியம் என்பதில் நேரு முழு கவனம் செலுத்தினார். அப்போது யார் ஆட்சி செய்திருந்தாலும் இப்படி தான் யோசித்து இருக்க முடியும். ஆனால் இப்போது நிலைமை வேறு. இந்தியா வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு பொருளாதாரம் கொண்ட நாடு. மேலும் கடந்த பல தசாப்தங்களாக ராணுவ பலத்தை மிகப்பெரிய அளவில் பெருகி உள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் தற்போது இந்தியா ராணுவ பலத்தின் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது.
இந்திய ராணுவம் காண்பித்த தீரம்
இப்படியான ஒரு சூழ்நிலையில் 1962 ஆம் ஆண்டை போல மிரட்டி இந்தியாவை பணிய வைக்க முடியவில்லை. ஒரு இன்ச் கூட பின்னால் நகரவில்லை இந்திய ராணுவம். இதோ இப்போது லடாக்கில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டும் கூட, தீரத்தோடு நமது எல்லையை காப்பதற்காக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்கின்றனர் நமது ராணுவ வீரர்கள். இந்த விஜயத்தின் போது பிரதமர் மோடியின் கூறிய வார்த்தைகளிலிருந்து நாம் கடன்பெற்று சொல்ல வேண்டுமானால் "நமது இந்திய ராணுவ வீரர்களின் மன உறுதி, மலையின் வலிமைக்கு ஈடாக உள்ளது. அவர்களின் வீரம் மலைகளின் உயரத்தை விட அதிகமாக இருக்கிறது". இப்படி வீரம் மட்டும் இருந்தால் போதாது, விவேகமும் வேண்டும் அல்லவா. நமது இந்திய ராணுவம் எப்போதும் வீரத்துக்கு பெயர் பெற்றது. புறமுதுகு காட்டி நமக்கு பரம்பரைக்கே பழக்கம் கிடையாது. ஆனால், 1962ம் ஆண்டு போரின்போது இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்படுவதற்கு முக்கிய காரணம், நமது எல்லைகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் கிடையாது. ராணுவ வீரர்களிடம் போதிய ஆயுதங்கள் கிடையாது.
லடாக் சென்ற மோடி
தன்மான உணர்வுடனும், வீரத்துடனும் ராணுவ வீரர்கள் போரிட்டு வீரமரணம் அடைந்தனர். ஆனால் இப்போது நிலைமை வேறு. கடந்த பல ஆண்டுகளாக அருணாச்சல பிரதேசம், லடாக், உள்ளிட்ட சீன எல்லைப் பகுதிகளில் இந்தியா சாலை கட்டமைப்பு வசதிகளை மிக வேகமாக செய்து வருகிறது. சீனாவின் கோபத்துக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இப்போது நினைத்த மாத்திரத்தில் நம்மால் ராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்ப முடியும். லடாக் எல்லையில் இந்தியா தனது போர் விமானங்களை குவித்து வருகிறது. மிரட்டினால் பயப்படும் நாடுகளை, மிரட்டி மிரட்டியே காரியம் சாதிப்பது சீனாவின் கை வந்த கலை. ஆனால் இந்தியாவோ, நீங்கள் ஒரு போர் விமானத்தை நிறுத்தினால் நான் 10 விமானங்களை கொண்டு நிறுத்துவேன் என்று பதிலடி காட்டியது. எல்லாவற்றையும்விட உச்சமாக பிரதமரே, நேரடியாக ராணுவ வீரர்களை சந்தித்துவிட்டு, நிலைமையை நேரில் ஆய்வு செய்தார். பிரதமர் அங்கு சென்று இறங்கியதுமே சீனா கதறத் தொடங்கியது. பேச்சுவார்த்தை மூலம் டென்ஷனை தீர்க்க வேண்டுமே தவிர டென்ஷனை அதிகரிக்கக் கூடாது என்று சீனா கூறியது. இந்த வார்த்தை, சாத்தான் வேதம் ஓதுவது போலத்தான். டென்ஷனை அதிகரித்து விட்டு பதிலடி கொடுக்க இந்தியா தயாரானபோது பதுங்கியது டிராகன்.
உலக நாடுகள் ஆதரவு
சீனா மட்டுமே பிற நாட்டு எல்லையில் ராணுவத்தை குவித்த நிலையில், அதற்கு நேர் எதிராக இன்னொரு நாடு இத்தனை அதிகமான ராணுவத்தை குவிக்கும் என்று சமீபத்தில் முதல்முறையாக இப்போதுதான் உணர்ந்துகொண்டது சீனா. இந்தியர்கள் தங்களது நிலத்தில் ஒரு இன்ச் கூட விட்டுத் தர தயாராக இல்லை என்பதை சீனா புரிந்து கொண்டுவிட்டது. மற்றொரு பக்கம், நேரு காலத்தின்போது எந்த ஒரு மேலைநாட்டு ஆதரவும் நமக்கு உடனடியாக கிடைத்துவிடவில்லை. அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் ஆதரவு தருமாறு கடிதம் அனுப்பினார் நேரு. அவர்கள் பதில் வழங்குவதற்கு முன்பாக பயந்துபோய் சீனா போர் நிறுத்த ஒப்பந்தம் செய்தது. இப்போது நிலைமை அப்படி இல்லை.
பறக்கும் போர் விமானங்கள்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சீனா மீது கடும் கோபத்தில் உள்ள உலக நாடுகள், சீனாவை மூட்டை பூச்சி போல நசுக்குவதற்கு இந்தியா ஒரு உற்ற நண்பன் என்பதை உணர்ந்துள்ளன. ஆஸ்திரேலியாவும், அமெரிக்காவும், ஜப்பானும் பகிரங்கமாகவே சீனாவுக்கு எதிராக முஷ்டியை முறுக்குகின்றன. பிரிட்டனும் நம்ம பக்கம்தான். ஐரோப்பாவில் இருந்து தனது படைகளை சீன எல்லைக்கு, அனுப்புவதற்கு தயார் என்று அறிவித்து விட்டது அமெரிக்கா. மற்றொரு பக்கம் ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு வருகின்றன. ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை சிஸ்டம், அதிநவீன போர் விமானங்களை அதிகளவுக்கு கொள்முதல் செய்கிறது இந்தியா. இது அத்தனையையும் ஒருசேர கண்முன் வந்து போகிறது சீனாவுக்கு. அலறியடித்து பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுகிறது ஆக்கிரமிப்புக்கும் அராஜகத்துக்கு பேறுபெற்ற நமது அண்டை நாடு.