டெல்லி வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு- 200 பேர் படுகாயம்
டெல்லி: டெல்லியில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் (சி.ஏ.ஏ.) எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையேயான மோதலில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. இம்மோதல்களில் 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக ஷாகீன் பாக் பகுதியில் 2 மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தைக் கலைக்க துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட போதும் அது நிறைவேறவில்லை.
இந்த நிலையில் டெல்லியின் வடகிழக்கு பகுதிகளிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. ஆனால் இந்த போராட்டங்களுக்கு பாஜக உள்ளிட்ட சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது மிகப் பெரும் வன்முறையாக வெடித்தது.
வடகிழக்கு டெல்லியின் பல பகுதிகளில் இரு சமூகங்களிடையேயான மோதலாக இது மாறியது. குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மிக கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். பல பத்திரிகையாளர்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்களிடம் நீ இந்துவா? முஸ்லிமா? என கேட்டும் தாக்கியுள்ளனர்.
பத்திரிகையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு டெல்லியின் கஜூரி காஸ் பகுதியில் உடல் கருகிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. தற்போது பலி எண்ணிக்கை 25 ஆக அதிகரித்திருக்கிறது. 200க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் டெல்லி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லியில் 2 நாட்களாக நீடிக்கும் இந்த வன்முறையை கட்டுப்படுத்த உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். நள்ளிரவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சம்பவ இடங்களைப் பார்வையிட்டார். வடகிழக்கு டெல்லியின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அங்கு துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான தகவல்களில் முதலில் குழப்பம் நிலவியது. பின்னர் டெல்லி போலீசார், வன்முறையாளர்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது; பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியதன் மூலம் உறுதி செய்யப்பட்டது.