டெல்லி வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரிப்பு- 1820 பேர் கைது
டெல்லி: வடகிழக்கு டெல்லியில் சி.ஏ.ஏ. ஆதரவு போர்வையில் இந்துத்துவா கும்பல் நடத்திய வெறியாட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த வன்முறைகளில் ஈடுபட்டதாக 1820 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஷாகீன் பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெறுகிறது.
இதே பாணியில் வடகிழக்கு டெல்லியிலும் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தை இஸ்லாமியர்கள் முன்னெடுத்தனர். இதற்கு எதிராக பாஜக தலைவர்களின் தூண்டுதலின் பேரில் வன்முறை கும்பல் வெறியாட்டம் போட்டது.
இதனால் வடகிழக்கு டெல்லியே போர்க்களமானது. இஸ்லாமியர்கள் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் இலக்கு வைத்து சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. இஸ்லாமியர்களை குறிவைத்தும் இந்த கும்பல் தாக்குதல் நடத்தியது.
இந்த கோர வெறியாட்டத்துக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 53 ஆக அதிகரித்துள்ளது. டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 44 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் 5 பேரும் எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் 3 பேரும் ஜேபிசி மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் படுகாயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மோதல்களில் உளவுப்பிரிவு அதிகாரி அங்கித் சர்மா படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தேடப்பட்டு வந்த ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலர் தாஹிர் உசைன் இன்று டெல்லி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
டெல்லி வன்முறைகள் தொடர்பாக பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் மறுத்துவிட்டனர். இது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
1820 பேர் கைது
டெல்லி வன்முறைகள் தொடர்பாக இதுவரை 654 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 1820 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.