டெல்லி வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு
டெல்லி: டெல்லியின் வடகிழக்கு பகுதிகளில் 3 நாட்களில் நடைபெற்ற வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
வடகிழக்கு டெல்லியில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன. இதற்கு எதிராக சி.ஏ.ஏ.ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறைகளின் போது இஸ்லாமியர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர்.
இஸ்லாமியர்களின் வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்கள் சிதைக்கப்பட்டன. இந்த வன்முறைகளில் இதுவரை 38 பேர் பலியாகி உள்ளனர்.
இக்கொடூர வன்முறைகள் தொடர்பாக இதுவரை 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 106 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு டெல்லியில் வன்முறை பாதித்த பகுதிகளை தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல் நேற்று நேரில் பார்வையிட்டார். டெல்லியில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் டெல்லி உயர்நீதிமன்றம் இதனை நிராகரித்தது.
மேலும் டெல்லி வன்முறை சம்பவங்களுக்கு காரணமாக பாஜகவின் கபில் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யவும் நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார். ஆனால் இரவோடு இரவாக நீதிபதி முரளிதரன் இடம்மாற்றம் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது. வடகிழக்கு டெல்லி பகுதிகளில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.