ஓபிஎஸ் மீதான தகுதி நீக்க வழக்கு: 3 வருடமா சபாநாயகர் தாமதம் செய்வது? ரொம்ப அதிகம்.. தலைமை நீதிபதி
டெல்லி: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீதான புகாரில் சபாநாயகர் காலதாமதம் செய்தது ஏன் என்று உச்சநீதிமன்றம் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட அதிமுகவை சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் இரு தரப்பும் காரசார வாதம்
வழக்கு
ஆனால் அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கையை சபாநாயகர் எடுக்கவில்லை. கொறடா உத்தரவை எதிர்த்து வாக்களித்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக எம்.எல்.ஏ சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அது தள்ளுபடியான நிலையில், திமுக சார்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தலைமை நீதிபதி
தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே, தலைமையிலான அமர்வு இன்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. ஓபிஎஸ் தரப்பு சார்பில், முகுல் ரோத்தகியும், திமுக சார்பில் கபில் சிபலும் ஆஜராகியுள்ளனர். அப்போது, சபாநாயகருக்கு இப்படித்தான் உத்தரவிட வேண்டும் என்றோ, எவ்வளவு காலக்கெடுவிற்குள் உத்தரவிட வேண்டும் என்றோ நீதிமன்றங்கள் உத்தரவிட முடியாது என்று, முகுல் ரோத்தகி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தாமதம் தேவையில்லை
இதனால், அதிருப்தியடைந்த தலைமை நீதிபதி, அதற்காக 3 வருடங்கள் முடிவெடுக்காமலா இருப்பீர்கள். இந்த பிரச்சினையில் 3 வருடமாக சபாநாயகர் காலதாமதம் செய்வது தேவையற்றது. 3 மாதங்களுக்குள் முடிவெடுங்கள் என சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட வரலாறு உள்ளது. அந்த தீர்ப்பை கூட விட்டுவிடுங்கள். 3 வருடங்களாக சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது சரியல்ல என்றார்.
நோட்டீஸ்
சபாநாயகர் ஒரு விவகாரத்தின் மீது ஒரு குறிப்பிட்ட கால நேரத்தில் முடிவெடுங்கள் என உச்சநீதிமன்ற நீதிபதி நரிமன் சமீபத்தில் மணிப்பூர் சபாநாயகருக்கு உத்தரவிட்டிருந்தார். திமுக மனு மீது 3 வருடங்கள் ஆகியும் சபாநாயகர் முடிவெடுக்காமல் இருக்கிறார், என்று திமுக வக்கீல் கபில் சிபல் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, திமுக கொடுத்த மனு மீது சபாநாயகர் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என்று விளக்கம் அளிக்க தமிழக சட்டசபை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை, பிப்ரவரி 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.