மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 6 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்.. ரூ.45,000 கோடி நிதி ஒதுக்கீடு
டெல்லி: அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க, இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், 6 நீர் மூழ்கி கப்பல்களை தயாரிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ப்ராஜெக்ட் 75-ஐ என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு சுமார் ரூ.45,000 கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. வெளிநாட்டு தொழில்நுட்ப உதவியுடன், நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே பாதுகாப்பு அமைச்சகம் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால் அதன் பிறகு கிடப்பில் போடப்பட்ட இத்திட்டம் தற்போது மீண்டும் கையில் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள பாதுகாப்பு துறை வட்டாரங்கள், பாதுகாப்பு உபகரணங்களை தயாரிப்பதில் இந்தியா அடுத்த இலக்கை நோக்கிச் செல்லும் வகையில், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேறினால் நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்குவது, மாதிரிகளை அமைப்பது உள்ளிட்டவற்றில் இந்தியா முன்னோடியாக மாறி விடும். எனவே மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் திட்டத்தை, மிக முக்கிய நடவடிக்கையாக பார்ப்பதாகவும் பாதுகாப்பு துறை கூறியுள்ளது.
மேலும் இந்தியாவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள நீர்மூழ்கி கப்பல்கள் தற்போதுள்ள நவீன சாதனங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஓராண்டிற்குள் இதற்கான திட்டம் துவக்கப்படும் என்றும், வரும் 8 ஆண்டுகளுக்குள் 6 நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கும் பணி முழுமையாக நிறைவேற்றி முடிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க ஒப்பந்தத்திற்கு வருமாறு தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றிற்கு ஏலம் எடுக்க, தனியார் நிறுவனங்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அழைப்பு விடுத்திருப்பது இரண்டாவது முறையாகும்.
நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க விருப்பம் தெரிவிக்கும் இந்திய நிறுவனங்களை, கப்பல் கட்டும் களத்தில் நிபுணத்துவம், நிதி வலிமை மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பட்டியலிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ப்ரரஜெக்ட் 75-ஐ திட்டத்தில் சேர இந்திய நிறுவனங்கள் ஆர்வத்தை விருப்பம் தெரிவித்தவுடன், கொள்முதல் செயல்பாட்டில் விலை நிர்ணயம் செய்வதற்கான நிறுவனங்களின் கோரிக்கை குறித்து ஆராயப்படும் என பாதுகாப்பு துறை கூறியுள்ளது.
இந்திய கடற்படை தற்போது 14 நீர்மூழ்கிக் கப்பல்களை கொண்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இவை தவிர அணு ஆயுதங்களை நீண்ட தொலைவு எடுத்து சென்று தாக்கும், இரு நீர்முழ்கி கப்பல்களும் இந்திய கடற்படையில் உள்ளன. இவை இரண்டும் ரஷ்ய தொழில்நட்ப உதவியுடன் தயாரான அணுசக்தியால் இயங்கும் அதிவேக நீர்மூழ்கி கப்பல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.