ஜூலை 1 முதல் விமான கட்டணத்தை உயர்த்த முடிவு.. சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல்
டெல்லி: விமானப் பாதுகாப்புக் கட்டணத்தை அதிகரிக்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளதால், விமான பயண கட்டணம் சிறிது விலை உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின் படி, வரும் ஜூலை 1-ம் தேதி முதல் விமான கட்டணத்தில் சிறிதளவு ஏற்றம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. விமான பாதுகாப்பு கட்டணத்தை ஒவ்வொரு இந்திய பயணிக்கும் ரூ130-லிருந்து ரூ150-ஆக உயர்த்த சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதனையடுத்தே வரும் ஜூலை 1 முதல் விமான பயண கட்டணம் சிறிது உயர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஒவ்வொரு சர்வதேச பயணிகளுக்குமான விமான பாதுகாப்பு கட்டணத்தை, 3.25 அமெரிக்க டாலர்களில் இருந்து 4.85 அமெரிக்க டாலர்களில் வரை அதிகரிக்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிகரிக்கப்பட உள்ள விமானப் பாதுகாப்புக் கட்டணமான ரூ.150 உள்நாட்டு விமான சேவையை உபயோகிக்கும் பயணிகளுக்கும் பொருந்தும் என நேற்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அதே போல சர்வதேச பயணிகளிடமிருந்து விமானப் பாதுகாப்புக் கட்டணமாக 4.85 அமெரிக்க டாலர்கள் அல்லது அதற்கு சமமான இந்திய ரூபாய் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் சேவை கட்டணத்திற்கு மாற்றாகவே தற்போது விமானப் பாதுகாப்புக் கட்டணம் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேற்கண்ட விமானப் பாதுகாப்புக் கட்டணமானது வரும் ஜூலை 1ம் தேதி நள்ளிரவு முதலே அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது இது பயணிகள் சேவை கட்டணம் (பாதுகாப்பு அங்கம்) வசூலிக்கப்பட்ட 130 ரூபாய்க்கும் சர்வதேச பயணிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட 3.25 அமெரிக்க டாலர்களுக்கு மாற்றாக அமலுக்கு கொண்டு வரப்படு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.