விவசாயிகள் குற்றம்சாட்டிய ... தீப் சித்து பாஜக ஆதரவாளரா?... வைரலாகி வரும் புகைப்படம்!
டெல்லி: டெல்லி செங்கோட்டையில் நேற்று நடந்த சம்பவத்தில் சீக்கிய மதக்கொடியை ஏற்ற தீப் சித்து காரணமாக இருந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் தீப் சித்து பாஜக ஆதரவாளர் எனவும் பாஜகவின் குர்தாஸ்பூர் எம்.பி., நடிகர் சன்னி தியோலுக்கும் அவருக்கும் நெருக்கம் உள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் சன்னி தியோல் ஆகியோருடன் தீப் சித்து இருக்கும் ஒரு புகைப்படம் சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லி: விவசாயிகள் போராட்ட வன்முறைகளுக்கு காரணமே பாஜக ஆதரவு நடிகர் தீப் சித்துவாம்..விவசாய சங்கங்கள்
பரபரப்பான டெல்லி
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் சமூக விரோதிகள் புகுந்தனர். இதனால் போராட்டம் திசை மாறியது. சிலர் போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். போலீசார் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினார்கள். டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாய சங்க கொடிகள் ஏற்றப்பட்டன. டெல்லியே பரபரப்பானது.
தீப் சித்து மீது குற்றச்சாட்டு
பஞ்சாபி நடிகரும், பாடகருமான தீப் சித்துதான் இளைஞர்களை செங்கோட்டைக்கு அணிவகுத்து சென்று சீக்கிய மதக் கொடியை ஏற்றிவைக்க இளைஞர்களை தூண்டியதாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டின. தீப் சித்து போராட்டத்தை திசை திருப்பி காலிஸ்தானி இயக்கத்தை ஆதரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் பாஜகவின் குர்தாஸ்பூர் எம்.பி., நடிகர் சன்னி தியோளுக்கும், தீப் சித்துவுக்கும் நெருக்கம் உள்ளதாகவும், தீப் சித்து பாஜக ஆதரவாளர் எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.
வைரலான புகைப்படம்
பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் சன்னி தியோல் ஆகியோருடன் தீப் சித்து இருக்கும் ஒரு புகைப்படம் சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா தேர்தலில் போட்டியிட்ட நடிகர் சன்னி தியோலுக்கு தேர்தல் ஏஜெண்டாக பணியாற்றியவர் தீப் சித்து ஆவார். அப்போது அவர் 2019 மக்களவைத் தேர்தலில் தியோலுக்காக பிரச்சாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் விவசாயிகளுக்காக சம்பு மோர்ச்சா என்ற அமைப்பை தொடங்கினார். தற்போது விவசாயிகள் போராட்டம் தொடங்கியது முதலே அதில் தன்னை இணைத்துக்கொள்ள முயற்சித்து வந்ததாக தெரிகிறது.
தீப் சித்து விளக்கம்
இந்த நிலையில்தான் செங்கோட்டையில் மதக்கொடியை ஏற்ற தீப் சித்து காரணமாக இருந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள தீப் சித்து, தங்களது எதிர்ப்பை காட்டுவதன் அடையாளமாகவே செங்கோட்டையை நோக்கி பேரணி சென்றதாகவும், அங்கு தேசியக் கொடியை இறக்கவில்லை என்றும் தங்களுடைய கொடியை மட்டும் ஏற்றியதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.