எல்லை வரையறையை சீனா ஒப்புக் கொள்ள மறுக்கிறது- பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை- ராஜ்நாத்சிங்
டெல்லி: எல்லை வரையறைகளை சீனா ஒப்புக் கொள்ள மறுப்பதால் இருநாடுகளிடையேயான பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை என்று லோக்சபாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துள்ளார்.
லடாக்கின் கிழக்குப் பகுதியில் கடந்த மே மாதம் முதல் சீனா அத்துமீறி ஊடுருவி வந்தது. இதன் உச்சமாக ஜூன் 20-ந் தேதி இந்திய எல்லைக்குள் நுழைந்து ஆக்கிரமிக்க முயற்சித்தது.
சீனாவின் இந்த முயற்சியை இந்திய ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 60-க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் இதுவரை சீனா இதனை உறுதி செய்யவில்லை.
லடாக் மோதல்.. இந்தியா - சீனா இடையே எல்லையில் நடந்த பேச்சுவார்த்தை.. உடன்படிக்கை எட்டப்படவில்லை!
சீனாவுக்கு பதிலடி
இந்த மோதலுக்குப் பின்னர் எல்லையில் யுத்த பதற்றம் ஏற்பட்டது. இருப்பினும் சீனாவுடன் பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன. இந்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போதும் சீனா வீரர்கள் ஊடுருவல் முயற்சிகளை கைவிடவில்லை. ஆனால் எல்லையில் இதற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.
மாஸ்கோ பேச்சுவார்த்தைகள்
இதனிடையே மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் சென்றிருந்தனர். இந்த மாநாடுகளின் போது சீனாவின் அமைச்சர்களுடன் அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சீனா வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி- உடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் 5 முக்கிய அம்சங்களுடன் கூடிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.
கூடியது நாடாளுமன்றம்
இருந்தபோதும் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் கொரோனா லாக்டவுனுக்குப் பின்னர் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. இதில் லடாக் ஊடுருவல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. காங்கிரஸ் கட்சியின் லோக்சபா குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்திருக்கிறார். இந்த பிரச்சனையை லோக்சபாவில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எழுப்பியும் இருந்தார்.
ராஜ்நாத்சிங் இன்று அறிக்கை தாக்கல்
இந்த நிலையில் லோக்சபாவில் லடாக் ஊடுருவல் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று விரிவான அறிக்கையைத் செய்தார். இந்த அறிக்கையில் ராஜ்நாத்சிங் கூறியிருந்ததாவது: கால்வன் பள்ளத்தாக்கில் நமது ராணுவ வீரர்கள் அளவு கடந்த பொறுமையை காட்டியிருந்தனர். எல்லை வரையறைகளை சீனா ஒப்புக்கொள்ள மறுக்கிறது.
பிரச்சனைகள் தீரவில்லை
எல்லை கட்டுப்பாட்டுக் கோடு தொடர்பாக இருநாடுகளிடையே கருத்து வேறுபாடு இருக்கிறது. இதனால் இருநாடுகளிடையேயான எல்லை பிரச்சனைக்கு எந்த தீர்வும் காணப்படவில்லை. இருதரப்பும் ஒப்புக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வு எட்டப்படவில்லை. எல்லைப் பகுதிகளிலும் சீனாவின் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் ராணுவ பட்டாலியன்களை பெருமளவில் குவித்து வைத்திருக்கிறது சீனா. எல்லைப் பகுதிகளில் சீனாவின் நடவடிக்கைகளுக்கு இந்திய தரப்பில் பதிலடி தரப்பட்டு வருகிறது. இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.