101 ராணுவ சாதனங்கள், தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை- பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்
டெல்லி: 101 ராணுவ சாதனங்கள், தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிவித்துள்ளார்.
Recommended Video
லடாக் உள்ளிட்ட எல்லைகளில் சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கால்வன் பள்ளத்தாக்கை சீனா ஆக்கிரமிக்க முயன்றது.
இதை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனையடுத்து சீனாவுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்து நிலைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனாலும் எல்லையில் படைகுவிப்பை தொடர்ந்து சீனா மேற்கொண்டு வருகிறது. இதனிடையே பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
வெள்ளையனே வெளியேறு என்பதை போல.. அசுத்தமே வெளியேறு என கோஷமிடுவோம்.. மாணவர்கள் மத்தியில் மோடி பேச்சு
அதில், பிரதமர் மோடி அறிவித்த தற்சார்பு இந்தியா கொள்கையை வலிமைப்படுத்தும் வகையில் 101 ராணுவ சாதனங்கள், தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுகிறது; இந்த 101 ராணுவ தளவாடங்கள், சாதனங்கள் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இறக்குமதி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
பீரங்கி துப்பாக்கிகள், துப்பாக்கிகள், ரேடார் உள்ளிட்ட ராணுவ தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையை நடப்பாண்டு முதல் 2024-ம் ஆண்டுக்குள் முழுமையாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.