பாதுகாப்புத் துறை அமைச்சரின் முதல் பயணம்... சியாச்சின் பனிமலைக்கு செல்கிறார் ராஜ்நாத் சிங்
டெல்லி: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் பதவியேற்றவுடன் முதல் பயணமாக நாளை சியாச்சின் பனிமலைக்கு செல்கிறார். இந்த பயணத்தின்போது ராணுவ தளபதி பிபின் ராவத்தும் உடன் செல்கிறார்.
பிரதமர் மோடி தலைமையிலான புதிய மந்திய அமைச்சரவையில் ராஜ்நாத் சிங்குக்கு பாதுகாப்புத்துறை ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று அவர் ராணுவ அமைச்சகத்தில் முறைப்படி பொறுப்பேற்றார். இதற்காக ரைசினா ஹில்சில் உள்ள ராணுவ அமைச்சகத்துக்கு வந்த ராஜ்நாத் சிங்கை முப்படை தளபதிகள் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.
முன்னதாக, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்துக்கு சென்று உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்ற பின், ராஜ்நாத் சிங் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.
இதில் ராணுவத்துறை இணை மந்திரி ஸ்ரீபத் நாயக், பாதுகாப்பு செயலாளர் சஞ்சய் மித்ரா, ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா, புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படை தளபதி கரம்பிர் சிங் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் போது, தங்கள் துறை சந்திக்கும் சவால்கள் மற்றும் ஒட்டுமொத்த செயல்பாட்டு முறைகள் குறித்து ஒவ்வொரு தளபதியும் தனித்தனியாக அறிக்கை அளிக்குமாறு முப்படை தளபதிகளை ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார். இதைப்போல ராணுவ அமைச்சகத்தின் ஒவ்வொரு பிரிவுகளும் தங்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை அளிக்க அவர் அறிவுறுத்தினார்.
சீனாவுடனான எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது, தீவிரவாத அச்சுறுத்தல்களை சமாளிப்பதும் ராஜ்நாத் சிங்குக்கு மிகப்பெரும் சவாலாக அமையும் என கருதப்படுகிறது. ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், இந்த பணிகளை முன்னெடுத்து செல்வதிலும் பாதுகாப்புத் துறையின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்பதும் பாதுகாப்பு வல்லுனர்களின் எதிர்பார்ப்பாகும்.
புல்வாமா தாக்குதலுக்கு, தக்க பதிலடி கொடுக்கப்பட்ட பிறகு, பாகிஸ்தான் ராணுவம் வாலாட்டுவதை நிறுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், எதிர்க்காலத்தில் எந்த மாதிரியான நடவடிக்கை இந்தியா மேற்கொள்ள போகிறது என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.