சீனாவுடன் எல்லை வரையறை தெளிவாக இல்லாததால் இருதரப்பிலும் ஊடுருவல்கள் நிகழ்கின்றன: ராஜ்நாத்சிங்
டெல்லி: சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாடு கோடு வரையறை தெளிவானதாக இல்லாததால் இருதரப்பிலும் ஊடுருவல்கள் நிகழ்கின்றன என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துள்ளார்.
லோக்சபாவில் காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் செளத்ரி இன்று பேசுகையில், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருகிறது. அந்த பாகிஸ்தானுக்கு சீனா அடைக்கலம் கொடுக்கிறது. தற்போது அந்தமான் தீவுகள் வரை சீனா போர்க்கப்பல்களை அனுப்பி உள்ளது.
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை வீரர்களிடையே மோதல்- சரமாரி துப்பாக்கிச் சூடு- 6 பேர் பலி
சீனாவிடன் ஏன் மென்மை போக்கு?
பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையாக பேசும் நாம் ஏன் சீனா விவகாரத்தில் நடுநிலை போக்கை வெளிப்படுத்துகிறோம்? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து ராஜ்நாத் சிங் பேசியதாவது:
தயார் நிலையில் ராணுவம்
எல்லையில் நமது படைகள் விழிப்புடன் இருந்து பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றன. எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள நமது ராணுவம் முழு அளவில் தயாராகவே இருக்கிறது.
இருதரப்பிலும் ஊடுருவல்கள்
சீனாவுக்கும் நமக்கும் இடையே இருதரப்பும் ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு என்பது இல்லை. இப்படி தெளிவான வரையறை இல்லாததால் ஊடுருவல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. சில நேரங்களில் சீனா ராணுவத்தினர் ஊடுருவுகின்றனர்; அதேபோல் நமது வீரர்களும் அப்பகுதிக்கு செல்கின்றனர் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
இறையாண்மை பாதுகாப்பு
சீனா எல்லைகளில் சாலைகள், சுரங்கங்கள், ரயில்வே பாதைகள், விமான தளங்கள் ஆகியவற்றை மேம்படுத்தி வருகிறோம். நமது நாட்டின் ஒற்றுமையையும் பாதுகாப்பையும் இறையான்மையையும் வலுப்படுத்த இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.