ரபேலில் மோடி தலையீடு இல்லவே இல்லை… ராகுல் புகாரை மறுக்கும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி
டெல்லி : ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை பாதுகாப்பு துறை அமைச்சக முன்னாள் அதிகாரி திட்ட வட்டமாக மறுத்துள்ளார்.
மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் மிக பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து 126 ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
பின்னர், 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் தேதி பாரிஸ் நகருக்குச் சென்ற பிரதமர் மோடி, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி காங்கிரஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்து, 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்தார். அந்த 36 ரபேல் போர் விமானங்களும் வானில் பறக்க முழு தகுதியுடையதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. போர் விமானம் ஒவ்வொன்றின் விலையும் முந்தைய விலையைக் காட்டிலும் 41.42 சதவீதம் விலை அதிகமாகும்.
அதிக விலை
காங்கிரஸ் ஆட்சியில் ரபேல் விமானங்களை வாங்க ஆலோசிக்கப்பட்ட விலையை காட்டிலும் அதிகமாக ரூ.58 ஆயிரம் கோடிக்கு விலை வழங்கப்பட்டு உள்ளதாகவும் விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
இதற்கு பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் பதிலளித்துவிட்டாலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. ரபேல் ஒப்பந்தத்தில் எந்த பாதகமான அம்சத்தையும் காண வில்லை என்று உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது என்றும் இதுதொடர்பான விசாரணைக்கு உத்தரவிடவும் மறுத்துவிட்டதையும் மத்திய அரசு கூறி வருகிறது.
அம்பானிக்கு தந்தார்
இந் நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, ரூ.30,000 கோடியை விமானப்படையிடம் இருந்து கொள்ளையடித்து அனில் அம்பானிக்கு. பிரதமர் மோடி அளித்திருக்கிறார். தற்போது மத்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் அளித்த அறிக்கையில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகையில், பிரதமர் மோடி தனியாக பேசி உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகம்
அவரின் இந்த குற்றச்சாட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந் நிலையில் ராகுலின் குற்றச்சாட்டுக்கு பாதுகாப்பு துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து, ரபேல் ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்ற காலக்கட்டத்தில் பாதுகாப்பு துறை செயலாளராக இருந்த மோகன் குமார் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
எந்த தகவலும் கிடையாது
அதில் அவர் கூறியிருப்பதாவது: பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ரபேல் விலை தொடர்பான எந்த தகவலும் இல்லை. மத்திய அரசு சார்ந்த பொதுவான விதிமுறைகள் மட்டுமே அவற்றில் இடம்பெற்றிருந்தன. அது 2015ம் ஆண்டுக்கான அறிக்கை என்று கூறியுள்ளார்.