டெல்லியில் தடுப்பூசி போட்டவர்களில் 51 பேருக்கு பக்க விளைவு.. ஐசியூவில் ஒருவர் அனுமதி
டெல்லி: டெல்லியில் நேற்று கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டவர்களில் 51 சுகாதார ஊழியர்களுக்கு சிறிய அளவில் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் நேற்று இந்தியாவில் தொடங்கியது. முதல் நாளான நேற்று இந்தியா முழுவதும் கோவிட் -19 க்கு எதிராக 1,91,181 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
16,755 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவசரகால பயன்பாட்டிற்கு கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மருந்துக்கு அளிக்கப்பட்டுள்ளதால் இரண்டு மருந்துகளும் நேற்று செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக இன்றும் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
இந்தியாவிலேயே முதல் தடுப்பூசியை போட்டு கொண்டவர்... டெல்லி எய்ம்ஸ் துப்புரவு தொழிலாளி!
டெல்லியில் தடுப்பூசி
இந்நிலையில் டெல்லியில் நேற்று கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டவர்களில் 51 சுகாதார ஊழியர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மயக்கம்
உடல் இறுக்கம், மயக்கம், தோல் அரிப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட்டதாக கூறப்டுகிறது. ஆனால் சிறிது நேர மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு பெரும்பாலோனார் வீடு திரும்பிவிட்டனர்.
எங்கு பாதிப்பு
51 பேரில் இரண்டு பேர் டெல்லி சரக் மருத்துவமனையில் ஊசி போட்டவர்கள் என்றும் வடக்கு ரயில்வே மத்திய மருத்துவமனையில் இருந்து இரண்டு பேருககு பக்க விளைவு ஏற்பட்டதாகவும் கூறப்பபடுகிறது. டெல்லியின் தெற்கு மற்றும் தென்மேற்கு மாவட்டங்களில் தலா 11 பேர் பக்க விளைவை சந்தித்துள்ளனர். மேற்கு டெல்லி மற்றும் கிழக்கு டெல்லி தலா ஆறு பேரும், மத்திய டெல்லி இரண்டு மற்றும் வட டெல்லியில் ஒருவருக்கும் பக்க விளைவு ஏற்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சை
தெற்கு டெல்லியில் மட்டும் ஒருவருக்கு கொஞ்சம் பக்கவிளைவு அதிகமாகி மயக்கம் அடைந்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட காவலரான அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதால் மயக்கம் அடைந்தார். அவர் அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
சுகாதார பணியாளர்கள்
டெல்லியில் கோவிட் -19 க்கு எதிராக 4,319 சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்கள பணியார்கள் தடுப்பூசி போடப்பட்டதாக டெல்லி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் டெல்லியில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் நேற்று 100க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் முன்னணி பணியாளர்கள் தடுப்பூசி போடவில்லை. எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் மொத்தமே 32 சுகாதாரப் பணியாளர்களுக்குத்தான் தடுப்பூசி போடப்பட்டது, அதே நேரத்தில் ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 42 பேர், டெல்லி புற்றுநோய் மருத்துவமனையில் 46 மற்றும் ஆர்.எம்.எல் மருத்துவமனையில் 31 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.