டெல்லியில் 9 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை.. உடல் எரிப்பு- வழக்கை கையில் எடுத்த கிரைம் பிராஞ்ச்
டெல்லி: டெல்லியில் 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு அவசர அவசரமாக சுடுகாட்டில் வைத்து தீ வைத்து எரிக்கப்பட்ட செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் இந்த வழக்கு விசாரணையை கிரைம் பிரான்ச் பிரிவுக்கு டெல்லி காவல்துறை மாற்றியுள்ளது.
தெற்கு டெல்லியின் ஓல்டு நன்கால் கிராம பகுதியைச் சேர்ந்தவர் அந்த 9 வயது சிறுமி. சம்பவத்தன்று அதிகாலை 5.30 மணி அளவில் தண்ணீர் பிடிப்பதற்காக அருகேயுள்ள சுடுகாடு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள தண்ணீர் குழாய் பகுதிக்குச் சென்றுள்ளார்.
ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை .
'யார்கிட்டையும் சொல்லக் கூடாது..' டெல்லியில் தலித் சிறுமி பாலியல் படுகொலை.. தாயை மிரட்டிய பூசாரி
சிறுமி மர்ம சாவு
இந்தநிலையில் அந்த சுடுகாட்டில் பூசாரியாக வேலை பார்த்து வரும் ராதே ஷியாம் என்ற நபர் மற்றும் அவரது நண்பர்கள் சிலர், சிறுமியின் தாயிடம், சிறுமி இறந்து கிடப்பதாக கூறி அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தண்ணீர் பிடிக்கக்கூடிய இடத்துக்கு அருகே சிறுமி உயிரிழந்த நிலையில் இருந்தார். மின்சாரம் தாக்கி சிறுமி பலியாகி விட்டதாக கூறிய பூசாரி மற்றும் அவரது நண்பர்கள் உடனடியாக சிறுமியின் உடலை அங்கேயே தகனம் செய்ய ஏற்பாடுகளைச் செய்தனர்.
கட்டாயப்படுத்தி தீ வைத்தனர்
இதற்கு அந்த சிறுமியின் தாயார் எதிர்ப்பு தெரிவித்தார். உடனடியாக தகனம் செய்ய கூடாது என்று வலியுறுத்தினார். மேலும் அந்த சிறுமியின் கைகள் உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் காயங்கள் இருப்பதை கண்ட அந்தத் தாய்க்கு சிறுமி சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்தது. சிறுமி உதடு நீல வண்ணத்தில் காணப்பட்டது. இதை பார்த்து அந்த தாய் அழுது புரண்டார். ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத அந்த நபர்கள் சிறுமியை அங்கேயே உடல் தகனம் செய்து விட்டனர். இதனிடையே தகவல் அறிந்த ஊர் மக்கள் சுமார் 200 பேர் திரண்டு வந்து போராட்டங்கள் நடத்தினர். உயிரிழந்த சிறுமி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆகும். இந்த விவகாரம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அமித் ஷா பதிலளிக்க கோரிக்கை
டெல்லி காவல்துறை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வருகிறது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக அமித் ஷா அறிக்கை அளிக்க மாட்டார். அவர் பயந்து ஓடிக் கொண்டிருக்கிறார். என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி டெரக் ஓ பிரையன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அமித்ஷா நாடாளுமன்றம் வந்தால் தனது தலையை மொட்டை அடித்துக் கொல்வேன் என்று டிவி நிகழ்ச்சி ஒன்றில் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.
கிரைம் பிராஞ்ச்
டெல்லியில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது, பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது என்று சமூக ஆர்வலர்களும் எதிர்க்கட்சியினரும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை கிரைம் பிராஞ்ச் பிரிவுக்கு மாற்றி உள்ளது டெல்லி காவல்துறை. மேலும் கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையில் பலாத்காரம் என்ற பிரிவும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
சிறுமி கால்கள்
பூசாரி மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. கொலையான சிறுமியின் கால்கள் மட்டும் எரிபடாத நிலையில் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மற்ற உடல் பாகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு இருக்கின்றன. எனவே இந்த வழக்கில் ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதனிடையே சிறுமியின் பெற்றோர் மற்றும் அந்த பகுதி மக்கள் பலரும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகே நேற்று முன்தினம் சாலையில் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தாயை ஏமாற்ற முயற்சி
இதனிடையே சம்பவத்தன்று சிறுமியின் உடலை வலுக்கட்டாயமாக எரிப்பதற்கு பூசாரி மற்றும் அவரது நண்பர்கள் கூறிய காரணம் அதிர்ச்சியடைய செய்துள்ளது. காவல்துறைக்கு இந்த விஷயம் சென்றால் ஊருக்கே தெரிந்துவிடும். மேலும் காவல்துறை வழக்குப் பதிவு செய்தால் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்வார்கள் அப்போது அவளது உடல் உறுப்புகளை டாக்டர்கள் திருடி கொள்வார்கள், எனவே சிறுமியின் உடலை இப்போது தகனம் செய்து விடுவது நல்லது என்று கூறி அந்த தாயை ஏமாற்றியுள்ளனர்.
உத்தர பிரதேச பலாத்கார சம்பவம்
இருப்பினும் அவர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் வலுக்கட்டாயமாக சிறுமியின் உடலை எரித்ததாக கூறப்படுகிறது. இந்த அளவுக்கு பகிரங்கமாக நாட்டின் தலைநகர் டெல்லியில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் உயர் ஜாதி இளைஞர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார். அவர் டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் அவரது குடும்பத்தினர் சம்மதம் இல்லாமல் அதிகாலை நேரத்தில் கட்டாயப்படுத்தி ஊருக்கு வெளியே அந்த இளம்பெண் சடலம் தீ வைத்து எரிக்கப்பட்டது. காவல்துறை இந்த விஷயத்தை செய்ததால் அப்போது நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி , பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் டெல்லியிலிருந்து உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் வரை யாத்திரை சென்று போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் டெல்லியில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அவசர அவசரமாக தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெண் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு ஐயப்பாடுகளை எழுப்பி உள்ளது.