6 வருடமாக உயர்த்தப்படாத மின் கட்டணம்.. ஏகப்பட்ட சலுகைகள்.. டெல்லியில் கலக்கும் முதல்வர் கெஜ்ரிவால்!
டெல்லி: டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியின் கீழ், கடந்த 6 வருடமாக டெல்லியில் மின் கட்டணம் உயர்த்தப்படவே இல்லை. கடந்த 28ம் தேதி டெல்லி மின் வாரிய துறை வெளியிட்ட அறிவிப்பில் இந்த வருடமும் மின்கட்டணம் உயர்த்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மீண்டும் ஆட்சியில் அமர்ந்து சிறப்பான திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து மின்சாரம் கட்டணத்தை உயர்த்தாமல், டெல்லி அரசு 6 வருடமாக ஒரே கட்டணத்தை பின்பற்றி வருகிறது.
இது தொடர்பாக டிவிட் செய்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மக்களுக்கு வாழ்த்துகள். ஒரு பக்கம் நாடு முழுக்க பல மாநிலங்களில் எல்லா வருடமும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் டெல்லியில் கடந்த 6 வருடமாக மின்கட்டணம் உயர்த்தப்படவே இல்லை.
இது ஒரு வரலாற்று சாதனை. நீங்கள் ஒரு நேர்மையான அரசுக்கு ஆதரவு அளித்த காரணத்தால் மட்டுமே இது சாத்தியப்பட்டுள்ளது, என்று அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த வருடமும் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று டெல்லி மின்சார வாரியம் அறிவித்துள்ளது. டெல்லியில் BSES ராஜ்தானி பவர் லிமிட்டட் (BRPL), BSES யமுனா பவர் லிமிட்டட் (BYPL), டாட்டா பவர் டெல்லி லிமிட்டட் (TPDDL), மற்றும் நியூ டெல்லி முனிசிபல் கவுன்சில் (NDMC) என்று எந்த விதமான நிறுவன மின் கட்டண தொகையும், உற்பத்தி தொகையும் உயர்த்தப்படவில்லை.
2013லேயே கெஜ்ரிவால் மின்கட்டண உயர்விற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மிக குறைவான மின்கட்டணம் டெல்லியில் கொண்டு வரப்படும் என்று கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தார்.
ஆட்சி வந்த உடனே டெல்லி மின்கட்டணத்தில் 50% கட்டணத்தை குறைத்தார்.
குஜராத் மாநிலத்தில் 100 யூனிட் வரை ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 3.5 க்கு அளிக்கப்படுகிறது. 101-200 யூனிட் வரை 1 யூனிட் மின்சாரம் ரூபாய் 4.15க்கு வழங்கப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் 100 யூனிட் வரை ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 4.49 க்கு அளிக்கப்படுகிறது. 101-200 யூனிட் வரை 1 யூனிட் மின்சாரம் ரூபாய் 6.34க்கு வழங்கப்படுகிறது. கோவாவில் 100 யூனிட் வரை ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 1.5 க்கு அளிக்கப்படுகிறது. 101-200 யூனிட் வரை 1 யூனிட் மின்சாரம் ரூபாய் 2.25 வழங்கப்படுகிறது.
செப்.21 முதல்.. 9-12ம் வகுப்பு மாணவர்கள்.. விருப்பம் இருந்தால் பள்ளிகளுக்கு செல்லலாம்.. மத்திய அரசு!
ஆனால் டெல்லியில் 200 யூனிட் வரை ஒரு யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படுகிறது. 201-400 யூனிட் வரை மின்சாரம் 50% கட்டண சலுகையுடன் வழங்கப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் சில நாட்களுக்கு முன்தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. 150 யூனிட் வரை ஒரு யூனிட் மின்சாரம் 4.9 ரூபாயில் இருந்து 5.5 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதேபோல் 151-300யூனிட் வரை 1 யூனிட் மின்சாரம் 5.4 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக உயர்த்தப்பட்டது. 301-500 யூனிட் பயன்பாட்டிற்கு 1 யூனிட் மின்சாரம் ரூபாயில் 6.2ல் இருந்து Rs 6.5 ஆக உயர்த்தப்பட்டது.
மற்ற மாநிலங்களில் மின் கட்டண விவரம்
மாநிலம் | 0-100 யூனிட் | 101-200 யூனிட் |
குஜராத்: | ரூ. 3.5 | ரூ. 4.15 |
பஞ்சாப்: | ரூ. 4.49 | ரூ. 6.34 |
கோவா: | ரூ. 1.5 | ரூ. 2.25 |
உத்தரகாண்ட்: | ரூ. 2.80 | ரூ. 3.75 |
டெல்லி: | ரூ. 0.00 | ரூ. 0.00 |
நிலைமை இப்படி இருக்க டெல்லியில் அப்படி மின்சார கட்டணம் உயர்த்தப்படவில்லை. முந்தைய வருடங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் கொரோனா காரணமாக டெல்லி அரசுக்கு ஏப்ரல் மாத வருவாய் 3500 கோடி ரூபாயில் இருந்து 300 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. ஆனாலும் 62 லட்சம் மின் பயனாளர்களை கொண்ட டெல்லியில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
கடந்த 2019லேயே டெல்லியில் 14 லட்சம் மக்களுக்கு மின் கட்டணமாக ஒரு ருபாய் கூட விதிக்கப்படவில்லை. 26 லட்சம் குடும்பங்களுக்கு மின் கட்டணமே விதிக்கப்படவில்லை. இந்த நிலையில் இப்போது கொரோனா லாக்டவுனுக்கு இடையே, கொரோனாவை கட்டுப்படுத்தி, தற்போது அங்கு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த சீரிய செயல்பாட்டிற்கு அம்மாநில மக்கள் பெரிய வரவேற்பை அளித்துள்ளனர்.