டெல்லி தேர்தல்.. 62.59% வாக்குகள் பதிவு.. 24 மணி நேர தாமதத்திற்கு பின் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 62.59% வாக்குகள் பதிவானது என்று டெல்லி தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தது .70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் சட்டசபை தேர்தல் நேற்று நடத்தப்பட்டது. வரும் 11ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் தேர்தல் நேற்று முடிந்த பின் 5 மணி வரையிலான வாக்கு பதிவு 61.54% என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மொத்தமாக எவ்வளவு வாக்கு பதவி செய்யப்பட்டது என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. நேற்று இரவு வரை தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிடவில்லை. பொதுவாக தேர்தல் முடிந்து 3 மணி நேரங்களில் முழு வாக்கு பதிவு சதவிகிதம் அறிவிக்கப்படும்.
ஆனால் டெல்லி தேர்தல் வாக்குபதிவு சதவிகிதம் குறித்து அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி இருந்தார். எனக்கு இது பெரிய அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியினர் பலர், பத்திரிகையாளர்கள் பலரும் இந்த கேள்வியை எழுப்பி இருந்தனர். இந்த நிலையில் இன்று மாலை 7 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்த டெல்லி தேர்தல் ஆணையர் ரன்பீர் சிங், வாக்குப்பதிவு குறித்து விளக்கம் அளித்தார்.
அதில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 62.59% வாக்குகள் பதிவானது. நாடாளுமன்ற தேர்தலைவிட 2% வாக்குகள் அதிகம் பதிவாகி உள்ளது. 2015 சட்டமன்ற தேர்தலில் 67.47% வாக்குகள் பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக பல்லிமரன் தொகுதியில் 71.6% வாக்குகள் பதிவானது. குறைவாக டெல்லி கண்டோன்மெண்ட் பகுதியில் 45.4% வாக்குகள் பதிவானது.
வாக்கு சதவிகிதத்தை தாமதமாக அறிவிக்க தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை. கணக்கு எடுக்கும் பணி காரணமாகவும், சரிபார்ப்பு பணி காரணமாகவும் இதில் தாமதம் ஏற்பட்டது. துல்லியமான சதவிகிதத்தை கொடுக்க வேண்டும் என்று நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.