ஒருநாள் கூட பிரச்சாரம் செய்யவில்லை.. டெல்லியை திரும்பி பார்க்காத மோடி.. கவனம் ஈர்த்த அமித் ஷா
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலுக்காக பிரதமர் மோடி இன்னும் ஒரு நாள் கூட பிரச்சாரம் செய்யவில்லை. டெல்லி முழுக்க பாஜக சார்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மட்டும்தான் பிரச்சாரம் செய்து வருகிறார்.
டெல்லி சட்டசபை தேர்தல் வேகமாக நெருங்கி வருகிறது.70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் வரும் சட்டசபை தேர்தல் நடத்தப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபைக்கு வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ஆம் தேதியும் நடைபெறும். 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது
வன்முறை போராட்டங்களால் நாடு பலவீனமடைந்துவிடும்: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
அமித் ஷா எப்படி
இந்த நிலையில் டெல்லியில் நடக்கும் தேர்தலுக்காக பிரதமர் மோடி ஒருமுறை கூட பிரச்சாரம் செய்யவில்லை. பொதுவாக மோடி பிரச்சாரம் செய்தால் அங்கு பாஜக எளிதாக வெற்றிபெறும். வட மாநிலங்களில் மோடி பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் அந்த கட்சி எளிதாக வென்றுள்ளது. முக்கியமாக உத்தர பிரதேசம், பீகாரில் மோடியின் பிரச்சாரம் அதிகம் உதவியது. யார் வேட்பாளராக இருந்தாலும் கூட, மக்கள் வெறுமனே மோடியின் பிரச்சாரத்தை பார்த்துவிட்டு வாக்களிப்பது வழக்கம்.
டெல்லி நிலை
ஆனால் இந்த முறை டெல்லி தேர்தலுக்காக மோடி பிரச்சாரம் செய்யவில்லை. தேர்தல் அறிவித்து ஒரு மாதம் ஆகிவிட்டது. பிரச்சாரம் மிக தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் ஒரே ஒரு முறை கூட பிரதமர் மோடி தலைநகரில் எங்குமே பிரச்சாரம் செய்யவில்லை. டெல்லி தேர்தல் தொடர்பாகவும் மோடி எதுவும் பெரிதாக பேசவில்லை. குடியரசுத் தின உரை மற்றும் மான் கி பாத் ஆகியவை மட்டுமே சமீபத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக எப்படி
மாறாக பாஜகவின் முன்னாள் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாதான் டெல்லியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். டெல்லியின் அனைத்து தொகுதியிலும் அமித் ஷா ஏறத்தாழ பிரச்சாரம் செய்துவிட்டார். 8 நாட்களாக அமித் ஷா தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். பாஜகவின் ஸ்டார் பிரச்சாரக்கராக அமித் ஷா உருவெடுத்து இருக்கிறார். மோடியின் இடத்தை இந்த முறை அமித் ஷா நிரப்பி இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும்.
யாருக்கு முன்னிலை
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போதும், சிஏஏவின் போதும் கூட அமித் ஷாவின் பெயரே முன்னிலைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கட்சியிலும் முக்கியமான விமர்சனங்களுக்கு எல்லாம் அமித்ஷாதான் பதில் அளிக்கிறார். அதேபோல் டெல்லி போராட்டங்கள் குறித்தும் அமித் ஷாதான் பேசுகிறார்.இப்படியாக சமீப நாட்களில் பாஜகவில் மோடியை விட அமித் ஷாதான் அதிகம் கவனம் பெறுகிறார் . சமீப நாட்களாக பாஜகவில் அமித் ஷாதான் அதிகம் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
வாய்ப்பு உள்ளது
இதனால் பாஜகவில் பிரதமர் மோடி ஓரம்கட்டப்படுகிறாரா, அமித் ஷா முன்னிலை பெறுகிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது. அடுத்த லோக்சபா தேர்தலில் பாஜக பிரதமர் மோடிக்கு பதில் அமித் ஷாவை முன்னிலைப்படுத்த கூட வாய்ப்புள்ளது. இந்த நிலையில் பெரும்பாலும் பிரதமர் மோடி வரும் பிப்ரவரி 3 மற்றும் 4 தேதிகள் டெல்லியில் பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளது. பட்ஜெட்டிற்கு பின் அவர் பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளது. ஆனால் இது உறுதியில்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.