தலைநகராச்சே.. டெல்லியாச்சே.. 15 வருஷம் போச்சே.. இன்னும் மீட்க முடியலையே.. கண்ணை கசக்கும் காங்கிரஸ்!
Recommended Video
டெல்லி: 15 வருடம் தன் செல்வாக்கில் இருந்த டெல்லியை கைநழுவ விட்டு.. ஜுனியர் கட்சிக்கு மீண்டும் தாரை வார்த்துள்ளது தேசிய கட்சியான காங்கிரஸ்!!
உண்மையை சொல்ல போனால், 1967 முதலே காங்கிரஸ் தன்னுடைய செல்வாக்கை இழந்து வருகிறது.. வங்கிகள் தேசியமயமாக்கலும் சரி, 80'ல் ஜனதா ஆட்சியில் ஏற்பட்ட குழப்பமும் சரி... 1984 மற்றும், 91'-ல் இந்திரா, ராஜீவின் படுகொலைகளும் சரி.. காங்கிரஸை ஒரேயடியாக நிலைகுலைய வைத்துவிட்டன.
1989 முதலே அது தன் சுயவலிமையை இழந்துவிட்டது... 2004ல் கூட்டணி என்ற கரத்தில் இணைந்தது.. தனியாக போட்டியிடும் திறனையும் பறிகொடுத்தது... இந்த நிர்ப்பந்தம்தான் காங்கிரஸால் சுயமாக நின்று எதையும் யோசிக்க முடியவில்லை.. கூட்டணி கட்சிகளுக்காக, அவைகளின் தயவுக்காக அடிபணியும் நிலை ஏற்பட்டது.. இந்த அவலம் இன்றும் தொடர்கிறது!!
வாரிசுகள்
வாரிசுகளை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது என்ற முத்திரையை உடையதுதான் காங்கிரஸின் அன்றுமுதல் இன்றுவரை உள்ள பலவீனம்.. கமல்நாத், அசோக் கெலாட் முதல் நம்ம ஊர் ப. சிதம்பரம் வரை வாரிசுகளை நிறுத்தி.. அவர்களை எப்படியாவது மேலே கொண்டு வர முயல்கிறார்களே தவிர, கட்சிக்கான பங்களிப்பை இந்த மூத்த தலைவர்கள் குறைவாகவே தருகிறார்களோ என்றுதான் தோன்றுகிறது. ராகுல்காந்தி பலவீனமான தலைவராக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டே இதற்கு பெரிய உதாரணம். அதனால்தான் இவர்கள் இறுதிவரை நடத்திய பிரச்சாரங்களும் பெரிய தாக்கத்தை மக்களுக்கு தரவில்லை.
கக்கன்
இதற்கு நம் கக்கனின் இங்கு ஒரு உதாரணமாக சொல்லலாம்.. தன்னுடைய பிரச்சாரத்தில் யாரையுமே திட்டி இவர் வாக்கு கேட்டதில்லை... எதிர்க்கட்சிகளின் மீது காரசார விமர்சனத்தை வெளிப்படுத்தியதில்லை.. யாரையுமே புண்படுத்தாமல், எதிர்மறையான, வார்த்தை தாக்குதலே இல்லாமல் கக்கன் செய்த பிரச்சாரம் இன்றைய இளைஞர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.. தங்களின் எதிர்கால திட்டம் என்ன, வளர்ச்சி பணிகள் என்ற பாசிட்டிவ் கொள்கைகளை மட்டுமே எடுத்து வைத்துதான் பிரச்சாரம் செய்தார்.. அதனால்தான் எதிர்க்கட்சியினரும் கக்கனை எப்போதுமே கடிந்து ஒரு வார்த்தைகூட பேசியதே இல்லை.
அமித்ஷா
ஆனால், ராகுல்காந்தியில் இருந்து ப.சிதம்பரம்வரை மக்கள் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தராமல் பிரச்சாரத்தை கையில் எடுத்தனர்... பிரதமரையும், அமித்ஷாவையும் தாக்குவதிலேயே முனைப்பு காட்டியது இவர்கள் மிகப்பெரிய அணுகுமுறை தவறு... 15 வருடமாக டெல்லியை தன் கட்டுக்குள் வைத்திருந்த காங்கிரஸ், இப்போது மிகப்பெரிய சறுக்கலில் விழுந்துள்ளது.. இன்னும் சொல்லப்போனால் ஒன்றிரண்டு மாநிலங்களைத் தவிர, இந்தியாவின் எந்தப் பகுதியிலும் இக்கட்சிக்கு அமைப்பு ரீதியான பலம் இல்லை.. கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த எந்த முயற்சியையும் காங்கிரஸ் செய்யவில்லை.. வாரிசுகளுக்கு தரும் முக்கியத்துவம், புதுமுகங்களுக்கு வழங்கப்படுவதே இல்லை!!
நலத்திட்டம்
வெறும், மக்களுக்கு செய்த நலத்திட்டங்களை முன்வைத்து இன்று ஆட்சியை பிடித்து காட்டி, தேசிய கட்சியான காங்கிரசுக்கு பாடம் கற்பித்துள்ளது ஆம் ஆத்மி... இன்னும் சொல்லபோனால், இந்த 2 தேர்தல்களில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியில்தான் ஆம் ஆத்மியே வளர்ந்திருக்கிறது. இழந்த செல்வாக்கை எப்படி மீட்க போகிறது காங்கிரஸ் என தெரியவில்லை... "ஊழலற்ற ஆட்சி" என்பதை பகிரங்கமாகவும், உரக்கமாகவும் கூக்குரலிட்டு பிரச்சாரம் செய்த கெஜ்ரிவாலை போல, காங்கிரஸ் தலைவர்களாலும் இதே தலைநகரில் குரல் எழுப்ப முடியுமா?
ஷீலா தீட்சித்
இந்த தேர்தலின்போது, களத்தில் பிரதான போட்டி ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும்தான் என்ற மாயை உருவானதே, காங்கிரசுக்கு பெருத்த அவமானம்தான்.. லிஸ்ட்டில் கூட பேருக்கு காங்கிரஸ் இடம்பெறாமல் போயிற்று.. ஷீலா தீட்சித் இருந்திருந்தால் இந்நேரம் டெல்லியின் தலையெழுத்தே வேறு மாதிரியாக இருந்திருக்கும்.. மத்திய அரசுடன் அவர் மோதல் போக்கை கடைபிடிக்கவில்லை... ராஜதந்திரமாக சுமூக உறவை கையாண்டார்... மக்களை தனது இல்லத்தில் சந்தித்து அவர்களின் நிறை குறைகளை கேட்டார்... அவரது மறைவுக்கு பிறகு டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்கென்று ஒரு செல்வாக்குபெற்ற தலைவர் இல்லை என்பது பெரிய குறை... இதை டெல்லி மக்கள் நன்றாகவே உணர்ந்திருந்தனர்.. அந்த இடத்தைதான் கெஜ்ரிவால் சரியாக பயன்படுத்தி கொண்டார்.
கையை பிசையும் நிலை
இப்போது அதல பாதாளத்தில் தொங்கி கொண்டிருக்கும் காங்கிரஸ் என்ன செய்ய போகிறது? குறைகளை எப்படி களைய போகிறது? தனது கட்டமைப்பை மாற்றி கொண்டு, புத்துணர்வுடன் நடைபோடுமா? தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தையாவது குறைந்தபட்சம் தக்க வைத்து கொள்ளுமா?! மொத்தத்தில் இருப்பதை விட்டு விட்டு கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறது.. அதன் சோகக் கதைக்கு எப்போது "என்ட் கார்டு" என்பதுதான் தெரியவில்லை.