துடைப்பத்தின் துணையுடன்.. தாமரை வியூகத்தை தகர்த்தெறிந்த கெஜ்ரிவால்.. தேசிய அளவில் மாற்றம் வருமோ!
கெஜ்ரிவாலின் வெற்றி ஏற்படுத்த போகும் தாக்கம் என்ன?
Recommended Video
டெல்லி: சிஏஏ-வுக்கு எதிரான போராட்டங்கள், மாநில தேர்தல்களில் பாஜகவின் தொடர் சரிவுகள் ஆகியவற்றுக்கு மத்தியில் ஆம் ஆத்மியின் இந்த தேர்தல் வெற்றி பல வழிகளில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதனால் தேசிய அளவிலான தாக்கத்தை இது எந்த வகையில் ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மிகப் பெரிய வெற்றியை நோக்கி ஆம் ஆத்மி கட்சி சென்று கொண்டுள்ளது. இந்திய வரலாற்றிலேயே எந்தவிதமான அரசியல் பின்புலமும் இல்லாமல் அரசியல் கட்சியைத் தொடங்கியவர் அரவிந்த் கெஜ்ரிவால்.
மத்திய அரசு அதிகாரியாக இருந்த அவர் ஊழலுக்கு எதிரான இயக்கத்தை ஆரம்பித்து அன்னா ஹசாரேவுடன் இணைந்து மக்களை திரட்டி போராட்டங்களை நடத்தியவர்.
ஆனால் இவர் ஒரு அரசியல் சக்தியாக உருவெடுப்பார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் 2013ல் நடந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக முதலிடத்தைப் பிடித்தபோது அடுத்த இடம் கெஜ்ரிவாலுக்கு கிடைத்தது. எடுத்த சீட்டுகள் 28... அதிர வைத்தார் தேசிய அரங்கை... பின்னர் காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தார் கெஜ்ரிவால். ஆனால் கொஞ்சம் கூட யோசிக்காமல் 49 நாட்களிலேயே ராஜினாமா செய்தார்.
கெஜ்ரிவாலின் வெற்றி ஏற்படுத்த போகும் தாக்கம் என்ன?
கெஜ்ரிவால்
பின்னர் 2015ல் நடந்த பொதுத் தேர்தலில் மீண்டும் ஒரு இமாலய சாதனையை படைத்தார். இந்த முறை பாஜக மற்றும் காங்கிரஸை ஓட விட்டார் கெஜ்ரிவால். ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 இடங்களில் 67ல் வெல்ல பாஜக 3 தொகுதிகளுடன் முடங்கியது. காங்கிரஸ் காணாமல் போனது. இதோ மீண்டும் ஒருமுறை வெல்கிறது ஆம் ஆத்மி.. இது நிச்சயம் வரலாற்றுச் சாதனை. 3வது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்கப் போகிறார் கெஜ்ரிவால்.
வெற்றி
இந்திய அரசியல் வரலாற்றில் நிச்சயம் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயர் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டியதுதான். இரு பெரும் அரசியல் சக்திகளை "ஜஸ்ட் லைக் தட்" துடைப்பத்தின் துணை கொண்டு அவர் விரட்டியிருப்பது சாதாரண விஷயம் அல்ல. அதுவும் அமித் ஷா போன்ற பெரும் ஜாம்பவானின் வியூகத்தை உடைத்தெறிந்து வெல்வது என்பது கின்னஸ் சாதனைக்கு ஒப்பானது. ஆனால் கெஜ்ரிவால் அதை சாதித்துள்ளார்.
வளர்ச்சி பணி
இன்று, ஆம் ஆத்மியின் வெற்றியை பார்க்கும்போது, வளா்ச்சி பணிகளுக்கு மக்கள் வாக்களித்துள்ளதாகவே கருதப்படுகிறது.. தலைநகரில் மதங்களுக்கிடையே எவ்வளவுதான் வெறுப்புணர்வினை வளர்த்தாலும், அதன்மூலம் சிலர் ஆதாயம் தேட நினைத்தாலும் தாங்கள் எந்த அளவுக்கு கவனிக்கப்படுகிறோம் என்பதில்தான் மக்கள் தெளிவாக உள்ளனர். மக்களுக்கு தேவையான குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஆம் ஆத்மி அரசு வழங்கியது மிகப்பெரிய தாக்கத்தை தந்துள்ளதை மறுக்க முடியாது.
மக்கள் முடிவு
இன்னும் சொல்லப்போனால், வளா்ச்சி பணிகளுக்கு மக்கள் வாக்களித்ததுபோலான நிலை, பிற மாநிலங்களுக்கும் பரவினால், ஒட்டுமொத்த தேசமும் வளா்ச்சியடையும் என்றுதான் தோன்றுகிறது. இறுதியாக ஒன்று... நாடாளுமன்றத் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் மக்கள் ஒரே முறையில் வாக்களிப்பதில்லை என்பதைதான் இந்த தேர்தல் முடிவு காட்டியிருக்கின்றன.
நிச்சயம் வரும்
சரி கெஜ்ரிவாலின் இந்த வெற்றியால் தேசிய அரசியலில் மாற்றம் வருமா என்றால் நிச்சயம் வரலாம்.. மாற்று சக்திக்காக மக்கள் நாடு முழுவதுமே ஏங்கிக் கொண்டுள்ளனர். கெஜ்ரிவாலுக்குக் கிடைத்துள்ள வெற்றி மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதப்பட வேண்டும். காரணம், எந்த பண பலமும், அதிகார பலமும் இல்லாமல் கிடைத்த சாமானிய மக்களின் வெற்றி இது. அதில் யாருக்கும் சந்தேகமே தேவையில்லை.
பின்புலம்
இன்று கெஜ்ரிவாலுக்கு டெல்லியில் கிடைத்த வெற்றியைப் போல நாளை பல மாநிலங்களில் மக்கள் சக்திக்கு வெற்றி கிடைக்கும் ஊக்கத்தை இது ஏற்படுத்தும். கமல்ஹாசன் போன்றோர் ஊழலற்ற மக்கள் ஆட்சியை நிறுவும் நோக்கில்தான் அரசியலுக்கு வந்தனர். அவர்களது பின்புலம் என்னவோ அது தெரியாது.. ஆனால் கெஜ்ரிவால் போன்று தீர்க்கமாக, மூர்க்கமாக அதிகார பலங்களை எதிர்த்துப் போராடினால் நிச்சயம் மக்கள் ஆதரவை வெல்லமுடியும் என்ற நம்பிக்கையை கமல் போன்றோருக்கு கெஜ்ரிவாலின் வெற்றி கொடுக்கக் கூடும்.
சாத்தியம்
தமிழகத்தைப் பொறுத்தவரை கெஜ்ரிவால்களுக்கு மக்கள்மத்தியில் எந்த மாதிரியான வாய்ப்புகள் என்பதை கணிப்பது மிக மிக கடினம். காரணம், கழகங்களுக்குள் சிக்கி மூழ்கிக் கிடக்கிறது தமிழகம். எனவே ஒரு உறுதியான, ஆக்கப்பூர்வமான தலைவராக ஒருவர் உருவெடுத்தால் நிச்சயம் அந்த மாற்றுக் கரத்தைப் பிடித்து மேலே வர நிச்சயம் தமிழக மக்கள் முயல்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அப்பற்ற, எளிமையான, மக்களுக்கான தலைவராக கெஜ்ரிவால் இருப்பதால்தான் அவருக்கு தொடர் வெற்றி சாத்தியமாகியுள்ளது என்பது முக்கியமானது.
பிராந்திய கட்சிகள்
அந்த வகையில் நாளை அதாவது வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் கெஜ்ரிவாலுடன் கூட்டணி அமைக்க பலர் முன்வரக் கூடும். குறிப்பாக பல மாற்று சக்திகள் அணி திரளக் கூடும். இது நாடெங்கும் மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருக்கும் உண்மையான மாற்றுக் கூட்டணியாகவும் அமையக் கூடும். இப்படி ஒரு வலுவான கூட்டணி, மக்கள் கூட்டணியாக உருவெடுக்கும் பட்சத்தில் அது நிச்சயம் பாஜக, காங்கிரஸுக்கு பெரும் சவாலாகவே அமையும். அத்தோடு, பிராந்திய அளவில் வலுவானவர்களாக நிலைத்திருக்கும் பல மாநிலக் கட்சிகளுக்கும் கூட அது சவாலாக உருவெடுக்கலாம்.
பார்க்கலாம்... கெஜ்ரிவால் டெல்லி புயலா அல்லது அகில இந்தியாவை வளைத்து சுருட்ட போகும் சுனாமியா என்பதை!!