டெல்லி சட்டசபை தேர்தல்.. முடிவுகளை மாற்றும் சக்தியாக உருவெடுத்த மாணவர்கள்.. பாஜக என்ன செய்யும் ?
டெல்லி சட்டசபை தேர்தலில் ஜேஎன்யூ மாணவர்களும் பல்வேறு மாணவ அமைப்புகளும் தேர்தல் முடிவுகளை மாற்றும் சக்தியாக உருவெடுத்து இருக்கிறார்கள்.
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் ஜேஎன்யூ மாணவர்களும் பல்வேறு மாணவ அமைப்புகளும் தேர்தல் முடிவுகளை மாற்றும் சக்தியாக உருவெடுத்து இருக்கிறார்கள்.
டெல்லி சட்டசபை தேர்தல் வேகமாக நெருங்கி வருகிறது.70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் வரும் சட்டசபை தேர்தல் நடத்தப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபைக்கு வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ஆம் தேதியும் நடைபெறும். 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது
டெல்லியில் ''நல்ல'' முகமின்றி தவிக்கும் பாஜக.. என்ன செய்வார் அமித் ஷா?.. களமிறங்கும் மத்திய அமைச்சர்
யார் வெற்றி
இந்த டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெறுவதற்கான சாதகமான சூழ்நிலைகள் இருப்பதாக கூறுகிறார்கள். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி கடந்த ஐந்து வருடங்களில் சிறப்பாக ஆட்சி செய்துள்ளது. அறிவித்த நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
அறிவிப்பு
அதேபோல் அறிவிக்காத பல முக்கிய திட்டங்களையும் ஆம் ஆத்மி அரசு செயல்படுத்தி இருக்கிறது. பெண்கள், ஏழைகளுக்காக நிறைய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. நிறைய இலவசங்களை அறிவித்து, அதை சிறப்பாக செயல்படுத்தி உள்ளது.
ஐந்து வருடம்
இந்த நிலையில் ஆம் ஆத்மியின் இந்த ஐந்து வருட ஆட்சி மட்டுமின்றி, இன்னும் பல முக்கிய விஷயங்கள் இந்த தேர்தலில் மாற்றத்தை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் முக்கியமானது, டெல்லி மாணவர்கள் போராட்டம். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி ஐஐடி மாணவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக போராடி வருகிறார்கள்.
என்ன போராட்டம்
சிஏஏ போராட்டம், மாணவர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம், கல்லூரி கட்டண உயர்வு போராட்டம், பல்கலைக்கழக தனியார் மயமாக்கலுக்கு எதிரான போராட்டம் என்று எல்லா போராட்டமும் டெல்லியை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இந்த டெல்லி மாணவர் போராட்டத்தை பாஜக அரசு சரியாக கையாளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
போலீஸ்
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் போலீசை அனுப்பி மாணவர்களை தாக்கியது தொடங்கி, இந்த போராட்டத்தில் மத்திய அரசு மீது நிறைய மோசமான கறைகள் இருக்கிறது. முக்கியமாக ஜேஎன்யூவில் மாணவர்கள் தாக்கப்பட்டது ஆகும்.
மௌனி அரசு
அரசுக்கு எதிராக பேசாமல் மௌனியாக இருக்கும் பெரிய பெரிய பாலிவுட் நட்சத்திரங்கள் கூட, இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க தொடங்கி உள்ளனர். இந்த மாணவர்கள் போராட்டம் டெல்லியில் மட்டுமின்றி நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காயம் அடைந்த மக்கள்
இந்த போராட்டத்தில் காயம் அடைந்த யாரையும் பாஜக தலைவர்கள் சென்று சந்திக்கவில்லை. திமுக எம்பி கனிமொழி, திருச்சி சிவா, காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர், இங்கு மாணவர்களை சென்று சந்தித்தனர். இதற்கு அவர்களுக்கு பெரிய அரசியல் மைலேஜ் கொடுத்தது. இதனால் டெல்லியில் பாஜகவின் இமேஜ் மொத்தமாக படுத்து உள்ளது.
அரசு
ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவர் ஐஸே கோஷ் தொடங்கி ஷேலா ரஷீத் வரை எல்லோரும் தற்போது டெல்லியில் முக்கிய புரட்சி முகங்களாக மாறி உள்ளனர். இவர்கள் இந்த டெல்லி சட்டசபை தேர்தலில் மிக முக்கிய பங்கு வகிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் அடுத்த நடவடிக்கை டெல்லி அரசியலை மாற்றும் முக்கியமாக பாஜகவிற்கு பெரிய தலைவலியாக அது மாறும் என்று கூறுகிறார்கள்.