அன்று 49 தொகுதிகளில் கூட ஜெயித்த பாஜக... இன்று சிங்கிள் டிஜிட்டுக்கே அல்லாடுதப்பா.. காங். கதையே வேற
Recommended Video
டெல்லி: டெல்லியில் 1993-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 49 இடங்களில் வென்று ஆட்சி அமைத்த பாஜகதான் இப்போது சிங்கிள் டிஜிட்டுக்கே பெரும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது.
டெல்லி சட்டசபை 1991-ம் ஆண்டு மீண்டும் உருவாக்கப்பட்டது. பின்னர் 1993-ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் தான் போட்டி. ஆம் ஆத்மி என்ற கட்சியே அன்று பிறக்கவும் இல்லை. அத்தேர்தலில் பாஜக 49 இடங்களில் வென்று தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. காங்கிரஸ் கட்சிக்கு 14 இடங்கள்; ஜனதா தளத்துக்கு 4 இடங்களும் கிடைத்தன. 3 சுயேட்சைகள் அத்தேர்தலில் வெற்றி பெற்றன. டெல்லியில் 1993-ல் பெற்ற பிரமாண்ட வெற்றியின் நிழல் பக்கம் கூட பிந்தைய தேர்தல்களில் பாஜகவால் ஒதுங்க முடியவில்லை.
பாஜகவின் தொடக்க கால ஆட்சி காலமே பெரும் சர்ச்சைகளாகவே வெடித்தது. ஊழல் வழக்கில் சிக்கி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பாஜகவின் மதன்லால் குரானா. அவரைத் தொடர்ந்து சாகிப் சிங் வர்மா வந்தார். அவராலும் நிலையான ஆட்சியைத் தர முடியவில்லை. வரலாறு காணாத வெங்காய விலை உயர்வால் சாகிப் சிங் சர்மாவும் ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து சுஷ்மா ஸ்வராஜை முதல்வராக்கியது பாஜக. 1998 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களைக் கைப்பற்றியது. சுஷ்மா ஸ்வராஜை முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொன்ட பாஜக 15 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. 2003 தேர்தலிலும் காங்கிரஸ் அமோக வெற்றியை பெற்றது. அத்தேர்தலில் காங்கிரஸ் 47 இடங்களிலும் பாஜக 20 இடங்களையும் பெற்றன.
2008 சட்டசபை தேர்தலில் 3-வது முறையாக வென்று ஆட்சியை தக்க வைத்தார் காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீட்சித். இத்தேர்தலில் பாஜக 23 இடங்களைப் பிடித்தது. இதன்பின்னர்தான் டெல்லி அரசியலில் தேசிய கட்சிகளின் சகாப்தத்துக்கு வேட்டு வைக்க உதயமானது ஆம் ஆத்மி கட்சி. 2013 தேர்தலில் டெல்லி தேர்தலை முதன் முதலில் எதிர்கொண்டது ஆம் ஆத்மி கட்சி. முதல் தேர்தலிலேயே 28 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் கட்சிக்கு மரண அடியை கொடுத்தது ஆம் ஆத்மி. இருப்பினும் பாஜக 34 இடங்களைக் கைப்பற்றியது. அதேநேரத்தில் எந்த காங்கிரஸை விமர்சித்து ஆம் ஆத்மி களத்துக்கு வந்ததோ அதே கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்ந்தது. ஆனால் 49 நாட்களே முதல்வர் நாற்காலியில் அரவிந்த் கெஜ்ரிவால் இருந்தார். இதனால் டெல்லியில் ஆட்சி கவிழ்ந்து ஜனாதிபதி ஆட்சி அமலானது.
டெல்லி தேர்தலில் வாக்கு சதவீதம்.. தக்க வைத்தது ஆம் ஆத்மி.. தட்டி தூக்கிய பாஜக
2015 சட்டசபை தேர்தலில் மீண்டும் கெர்ஜிவால் வெற்றிக் கொடி நாட்டினார். தேசிய கட்சிகளான பாஜகவையும் காங்கிரஸ் கட்சியையும் டெல்லி மண்ணில் குழிதோண்டி புதைத்தது ஆம் ஆத்மி கட்சி. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67-ல் ஆம் ஆத்மி வென்றது. பாஜகவுக்கு 3 இடங்கள்தான் கிடைத்தன. காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
தற்போதைய தேர்தலிலும் ஏறத்தாழ இதேநிலவரம்தான்... ஆம் ஆத்மி கட்சி 63 இடங்களில் வென்றுள்ளது. பாஜக 7 இடங்களில் அல்லாடிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு வழக்கம் போல முட்டைதான் கிடைத்திருக்கிறது. 15 ஆண்டுகாலம் டெல்லியை இடைவிடாமல் ஆண்ட காங்கிரஸுக்கு ஒரு இடத்தை கூட டெல்லி வாக்காளர்கள் தரவில்லை. இன்னொரு பக்கம் டெல்லியில் கடந்த 5 சட்டசபை தேர்தல்களில் பாஜகவுக்கு பெரும் தோல்வியையே பரிசாக கொடுத்தும் வருகின்றனர் டெல்லி வாக்காளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.