விடிய விடிய வியூகம்- 200 எம்பிக்கள் முற்றுகை- டெல்லி தேர்தலில் அமித்ஷாவின் 45 சீட் கனவு நிறைவேறுமா?
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வகையில் 45 இடங்களை கைப்பற்றிவிடுவோம் என பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறாராம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
டெல்லி என்கிற சிறிய மாநில தேர்தலுக்கு தமது பெரும்பான்மை பலத்தை முழுவீச்சில் பயன்படுத்தியது பாஜக. 200க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் களமிறக்கப்பட்டனர். ஒவ்வொரு தொகுதியில் பாஜகவால் களமிறக்கப்பட்டவர்கள் ஏராளமானோர்.
டெல்லி மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு நாளும் மறுநாளுக்கான வியூகங்களை விடிய விடிய வகுத்தவர் அமித்ஷா. டெல்லி தேர்தல் களத்தில் அமித்ஷா 50 பொதுக் கூட்டங்களில் பங்கேற்றார்.
ஆனால் பாஜகவின் புதிய தலைவரான ஜே.பி. நட்டா, 44 பொதுக்கூட்டங்களில்தான் பங்கேற்றார். பல்வேறு தொகுதிகளில் கட்சி தொண்டர்களின் கருத்துகளை கேட்டு அதற்கேற்பவும் வியூகங்களை வகுத்தவர் அமித்ஷா.
டெல்லி பாஜகவில் நீடித்து வரும் கோஷ்டி பூசல்கள் குறித்துதான் தொண்டர்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதனை உன்னிப்பாக கேட்டுக் கொண்ட அமித்ஷா, வாக்காளர்களை வாக்கு சாவடிக்கு அழைத்து வருகிறவர்கள் தொண்டர்கள். அவர்களின் கருத்துகளையும் மதிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
பிரதமர்னா வேற மாதிரி இருக்கனும்.. மோடி பிரதமரை மாதிரியே நடந்து கொள்வதில்லை.. ராகுல் காந்தி அட்டாக்
மேலும் 15 நாட்களாக டெல்லி பாஜக தலைவர்கள் தேர்தலில் என்ன பிரசாரத்தை செய்ய வேண்டும் என்பதை பிரிண்ட் அவுட் எடுத்து கொடுத்தும் வழிகாட்டியிருக்கிறார் அமித்ஷா. டெல்லி தேர்தல் தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த அமித்ஷா, டெல்லி தேர்தலில் மக்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பை பெற்றேன்.
பொய்யான வாக்குறுதிகளால் டெல்லி வாக்காளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லிக்கு தற்போது தேவை வளர்ச்சிதான். டெல்லி தேர்தலில் பாஜக 45 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார். டெல்லியில் படுதீவிரமாக களப்பணியாற்றிய பாஜகவின் ஆட்சி அமைக்கும் ஆறுதல் கனவு நிறைவேறுமா? என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.