டெல்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மிக்கு புகழாரம் சூட்டிய சிவசேனா- கடுப்பில் காங்கிரஸ்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு நாளை நடைபெறும் நிலையில் காங்கிரஸின் கூட்டணி கட்சியான சிவசேனா, ஆம் ஆத்மி கட்சியை பாராட்டியிருப்பது அக்கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் 70 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. நாளை பதிவாகும் வாக்குகள் வரும் 11-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் முழு வீச்சில் டெல்லியில் பிரசாரம் செய்தனர். மத்திய அமைச்சர்கள் பலரது பேச்சுகளும் சர்ச்சைகளாகின. தேர்தல் ஆணையமும் மத்திய அமைச்சர்கள் பிரசாரங்களுக்கு தடைகளும் விதித்தன.
இந்நிலையில் டெல்லி தேர்தல் குறித்து காங்கிரஸின் கூட்டணி கட்சியான சிவசேனா தமது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், ஆம் ஆத்மியை புகழ்ந்து எழுதியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சாம்னாவில் எழுதப்பட்டுள்ளதாவது:
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து பிரதமர் மோடியும் அமித்ஷாவும் டெல்லி தேர்தலில் பகீரதபிரயத்தனம் செய்துள்ளனர். டெல்லியில் பாஜக வெல்ல வேண்டும் என்று விரும்புவது தவறு இல்லை.
புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது.. தேசிய நீரோட்டத்திற்கு வரவேற்கிறேன்.. அசாமில் மோடி உற்சாக உரை
ஆனால் 200 எம்.பிக்கள், ஒட்டுமொத்த மோடி அமைச்சரவையும் களமிறங்கி இருப்பதைப் பார்த்தால் அரவிந்த் கெஜ்ரிவாலின் வலிமை என்ன என்று புரிந்து கொள்ள முடியும். 5 ஆண்டுகளாக தாம் செய்தவற்றின் அடிப்படையில் வாக்குகளை கேட்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
தேசத்தின் அரசியல் வரலாற்றில் இது புதிய சோதனை முயற்சி. கட்சி எல்லைகளைக் கடந்து அனைவரும் இதனை வரவேற்க வேண்டும். டெல்லி வாக்காளர்கள் மிகவும் புத்திசாலிகள். டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கு குறைந்தபட்ச அதிகாரங்கள்தான் இருந்தன. மத்திய அரசின் முட்டுக்கட்டைகளை தாண்டியும் கல்வி, சுகாதாரம், பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்திருக்கிறது கெஜ்ரிவால் அரசு.
அரவிந்த் கெஜ்ரிவாலை தீவிரவாதி என்கிறது பாஜக. அவர் தீவிரவாதி எனில் மத்திய அரசு ஏன் காத்திருக்க வேண்டும்? அப்படியானால் 2014 சட்டசபை தேர்தலில் 70% டெல்லி வாக்காளர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் என்கிற தீவிரவாதிக்குத்தான் வாக்களித்தார்களா? இவ்வாறு சாம்னா கேள்வி எழுப்பியுள்ளது.
மகராஷ்டிராவில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது சிவசேனா. ஆனால் டெல்லியில் ஆம் ஆத்மியை சிவசேனா பாராட்டியிருப்பது அக்கட்சியை அதிருப்தி அடைய செய்துள்ளது.