என்ஆர்சி மற்றும் என்பிஆருக்கு எதிராக டெல்லி சட்டசபையில் தீர்மானம்.. ஆம் ஆத்மி அரசு அதிரடி
டெல்லி: டெல்லி சட்டசபையில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு தேசிய மக்கள் தொகை பதிவு (என்பிஆர்) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
என்ஆர்சி மற்றும் என்பிஆர் ஆகியவை பொதுமக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளதால் அதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று டெல்லி அரசு வலியுறுத்தி உள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம்(சிஏஏ), மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்பிஆர்) மற்றும் தேசி மக்கள் தொகை பதிவு ஆகியவற்றுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு இடங்களில் கடந்த டிசம்பர் மாதம் முதல் போராட்டங்கள் நடந்து வருகிறது.
பெரிய அளவில் பீதி
குறிப்பாக என்பிஆர் குறித்து அஸ்ஸாமில் கேட்கப்பட்ட ஆவணங்களான தந்தையின் பிறந்த நாள் சான்றிதழ்கள் மற்றும் அவர்கள் இந்திய குடிமகன்கள் தானா என்பதை நிரூபிக்க கேட்கப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவை அச்சத்தை ஏற்படுத்தியது. அத்துடன் பிறப்பு சான்றிதழ் இல்லை என்றால் முகாம்களில் அடைக்கப்படுவோமோ என்ற பயமும் பீதியும் பெரிய அளவில் பரவியது.
தீர்மானம் நிறைவேற்றம்
இதனால் என்பிஆர் மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நாடு முழுவதும் வேகமாக பரவின. இந்த போராட்டம் இன்று வரை பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் என்ஆர்சிக்கு எதிராக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. தமிழகத்தில் என்ஆர்சி பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
என்ஆர்சிக்கு எதிராக
அந்த வரிசையில் டெல்லியை ஆளும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு தேசிய மக்கள் தொகை பதிவு (என்பிஆர்) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. டெல்லி சட்டசபை சிறப்பு கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டம் என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் என்பிஆர் மற்றும் என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் கொரோனா வைரஸ் மற்றும் டெல்லியில் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அரவிந்த் கெஜ்ரிவால் அச்சம்
சட்டசபையில் இன்று உரையாற்றிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "NPR மற்றும் NRC இன் கீழ், பொதுமக்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்குமாறு கேட்கப்படுவார்கள். இதை நிரூபிக்க 90% மக்களுக்கு அதிகாரப்பூர்வ பிறப்பு சான்றிதழ் இல்லை. அனைவரும் தடுப்பு மையத்திற்கு அனுப்பப்படுவார்களா? இந்த பயம் அனைவரையும் அச்சுறுத்துகிறது. என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசை வேண்டுகிறேன் என்றார். இதனிடையே நேற்று ராஜ்யசபாவில் என்பிஆர் தொடர்பாக பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, என்ஆர்சி தொடர்பாக எந்த ஆவணமும் தரத்தேவையில்லை. யாரும் பயப்பட வேண்டாம் என்றார்.