ஒரு பேச்சு.. அதை தொடர்ந்து வன்முறை.. இரவு முழுக்க பற்றி எரிந்த டெல்லி.. என்ன நடந்தது தலைநகரில்?
நேற்று டெல்லியில் சிஏஏ போராட்டத்தில் எப்படி கலவரம் வெடித்தது.
டெல்லி: நேற்று டெல்லியில் சிஏஏ போராட்டத்தில் எப்படி கலவரம் வெடித்தது. கலவரம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்க என்ன காரணம் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
டெல்லியில் நடந்து வந்த சிஏஏ போராட்டத்தில் நேற்று கலவரம் வெடித்தது. நேற்று மாலை தொடங்கிய கலவரத்தில் மொத்தம் 5 பேர் கொல்லப்பட்டனர். இதில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் கொல்லப்பட்டார்.
போலீஸ் துணை கமிஷ்னர் ஒருவர் படுகாயம் அடைந்தனர். 50க்கும் மேற்பட்டோர் இதில் மோசமாக காயம் அடைந்தனர். முக்கியமாக வடகிழக்கு டெல்லியில் அதிக அளவில் கலவரம் ஏற்பட்டுள்ளது.
விவரம்
இந்த கலவரத்தை முதலில் யார் தொடங்கியது என்று விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால் சிஏஏ ஆதரவு மற்றும் எதிர் தரப்பு இரண்டும் கல் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். அதேபோல் போலீசாரும் கல் வீசி தாக்குதல் நடத்தும் வீடியோக்கள் வெளியாகி உள்ளது. டெல்லியில் இருக்கும் இஸ்லாமியர்களின் கடைகள் பல அடித்து உடைக்கப்பட்டு உள்ளது.நேற்று இரவு முழுக்க டெல்லி பற்றி எரிந்தது.
கலவரம்
இன்று காலையும் விடாமல் கலவரம் நடந்து வருகிறது. டெல்லியில் ஜப்பார்பேட், மவ்ஜ்பூர், சாந்த்பாக், குர்ஜீ காஸ், பஜன்பூரா ஆகிய பகுதிகளில் கடுமையான கலவரம் நேற்று நடந்தது. அங்கிருக்கும் கடைகள், வீடுகள், வாகனங்கள் கொளுத்தப்பட்டது. இந்த கலவரத்தில் இன்னும் பலர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் இந்த கலவரம் எப்படி நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
தொடக்கம்
பிப்ரவரி 22ம் தேதி காலை 10:30 மணிக்குத்தான் இந்த கலவரத்திற்கான அறிகுறிகள் தெரிந்தது. ஜாபர்பேட் பகுதியில் பல பெண்கள், ஆண்கள் சிஏஏவிற்கு எதிராக போராட்டம் செய்ய களமிறங்கினர். ஜாபர்பேட் பகுதியில் மெட்ரோ அருகே ஒரு பகுதியை அவர்கள் மறைத்தனர். பீம் ஆர்மி விடுத்த அழைப்பின் பெயரில் சாந்த்பாக் முதல் ராஜ் காட் வரை இவர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
போராட்டம் பகுதி
அதன்பின் பிப்ரவரி 23ம் தேதி காலை 9 மணிக்கு போராட்டம் நடக்கும் பகுதிக்கு வந்த போலீசார், அவர்களை வெளியேறும்படி கூறினார். ராஜ் காட் வரை போராட்டம் செய்ய உங்களுக்கு அனுமதி இல்லை என்று கூறுகிறார். அதேநாள் மதியம் 12 மணிக்கு சமூக வலைத்தளங்களில் பாஜக உறுப்பினர் கபில் மிஸ்ரா தனது ஆதரவாளர்களை கூடும்படி அழைப்பு விடுத்தார்.
கூடினார்கள்
அதன்படி மவ்ஜ் புர் சவுக் பகுதியில் 24ம் தேதி மாலை 3 மணிக்கு கூடுங்கள். போராட்டக்காரர்களை நாம் எதிர்க்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் கூடுங்கள். ஜாபர் பேட் பகுதியில் போராடும் மக்களுக்கு நாம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும், என்று குறிப்பிட்டார். இவரின் இந்த பேச்சு இணையம் முழுக்க வைரலானது. இவரின் தொண்டர்கள் வரிசையாக கமெண்ட் செய்து, நாங்கள் கண்டிப்பாக வருவோம் வருவோம் என்று கூறினார்கள்.
கலவரம்
அதேபோல் பிப்ரவரி 24ம் தேதி மாலை 3-4 மணி அளவில் கபில் மிஸ்ரா சொன்னது போலவே, ஜாபர்பேட் பகுதியில் ஆயிரக்கணக்கில் இடதுசாரி கொள்கை கொண்டவர்கள் வந்தனர். அங்குதான் கலவரம் தொடங்கியது. மவ்ஜ்போர் சவுக் பகுதியில் போராடிய மக்கள் மீது போராட்டக்காரர்கள் கல் எடுத்து வீசினார்கள். அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மக்கள் மீது துப்பாக்கியால் 8 முறை சுட்டார்.
கலவரம் வெடித்தது
அதன்பின்தான் மொத்தமாக கலவரம் வெடித்தது. மவ்ஜ்போர், கார்வால் நகர், மவ்ஜ்போர் சவுக், பாபர்பூர், சாந்த் பாக் ஆகிய இடங்களில் மோசமாக கலவரம் வெடித்தது. இதனால் டெல்லி சிஏஏ போராட்டத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது டெல்லியில் 10 இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. சில மணி நேர அமைதிக்கு பின் மீண்டும் அங்கு கலவரங்கள் தீவிரம் அடைந்தது.
மொத்தமாக எரிந்தது
இந்த நிலையில் நேற்று இரவு முழுக்க ஜாபர்பேட் மொத்தமாக கொளுந்துவிட்டு எரிந்தது. இரவு முழுக்க டெல்லியில் கலவரம் நடந்தது. இதையே எப்படி கட்டுப்படுத்துவது என்று யாருக்கும் தெரியவில்லை. நேற்று இரவோடு இரவாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை செய்தார். இதில் போலீஸ் உயர் அதிகாரிகள், பாரா மிலிட்டரி அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இன்றும் நடக்கிறது
இன்று காலையும் போராட்டமும், கலவரமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அங்கு தற்போது பாராமிலிட்டரி ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கலவரம் அடங்குவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. அங்கு டெல்லி போலீஸ் கலவரத்தை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் செய்யாமல், வேடிக்கை பார்ப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.