ஐஎன்எக்ஸ்.. ப. சிதம்பரத்தை 2 நாள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி: சிபிஐ சிறப்பு நீதிமன்றம்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை இரண்டு நாள் காவலில் எடுக்க அனுமதி அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை இரண்டு நாள் காவலில் எடுக்க அனுமதி அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ சார்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இரண்டும் தனி தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கினார்கள்.
ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் புகார் உள்ளது. இதில் சிபிஐ வழக்கில் ஜாமீன் வழங்கினாலும், அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்திற்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.
அமலாக்கத்துறை வழக்கில் தற்போது ப. சிதம்பரம் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று தொடர்ந்து டெல்லி ஹைகோர்ட் மறுத்து வந்தது. இதற்கு எதிராக ப. சிதம்பரம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
இந்த ஜாமீன் மேல்முறையீட்டு வழக்கில் ப. சிதம்பரத்தின் ஜாமீனை எதிர்க்க என்ன காரணம் என்று கேட்டு உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதில் 26ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த நிலையில் இன்னொரு பக்கம் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை இரண்டு நாள் காவலில் எடுக்க அனுமதி அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நாளையும், நாளை மறுநாளும் அமலாக்கத்துறை ப. சிதம்பரத்தை விசாரிக்கலாம் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.