"இது பேரெழுச்சி".. மூச்சு திணறி வரும் தலைநகரம்.. விடாமல் போராடும் விவசாயிகள்.. முடிவு, விடிவு வருமா?
டெல்லி விவசாயிகளின் போராட்டம் இன்றும் தொடர்கிறது
டெல்லி: போராடிவரும் விவசாயிகளுடன் 3 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் ஒருமுடிவுக்கு மத்திய அரசால் வரமுடியவில்லை.. இதில் சுமூக முடிவு எட்டப்படாத காரணத்தினால், பேச்சுவார்த்தையும் மறுபடியும் தொடர்கிறது.. போராட்டமும் தீவிரமடைந்து வருகிறது.. இதனால் மத்திய அரசுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது தலைநகர போராட்டம்!
கடந்த வருடமே குறைந்தபட்ச விலை, நில கையகப்படுத்தும் சட்டம் போன்றவற்றிற்காக விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.. கிட்டத்தட்ட லட்சம் விவசாயிகள் அப்போதே டெல்லியை நோக்கி கிளம்பினர்.. ஆனால், உடனடியாக அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, மத்திய அரசு பணிந்தது.
ஆனால், இந்த முறை அப்படி இல்லை.. மொத்தம் 3 சட்டங்கள் என்பதால் பாஜக அரசு அசைந்து கொடுக்காமல் உள்ளது.. 3 வேளாண் சட்டங்களையும் நீக்க கோரி, டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள் திரண்டு முழக்கமிட்டு வருகிறார்கள்.. இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், பாஜக வலிமை பெற்ற, செல்வாக்கு நிறைந்த மாநிலங்களில்தான் விவசாயிகள் திரண்டு கொண்டிருக்கிறார்கள்.
விவசாயிகள்
குறிப்பாக, ஹரியானா, உத்திரபிரதேசத்தில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் படையெடுத்து கொண்டிருப்பதை யாராலும் தடுக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல, இந்த போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் நேரடியாக ஆதரவு தருவதும்கூட மத்திய அரசை அசைத்து பார்த்திருக்கிறது.
வயதானவர்கள்
இந்த போராட்டங்களில் பங்கெடுத்துள்ளோர் பெரும்பாலானோர் வயதானவர்களாகவே இருக்கிறார்கள்.. உழைத்து களைத்த சோர்வு அந்த பெரியவர்களின் முகத்தில் தென்பட்டாலும், போராடும் உறுதியுடன் குளிரில் உட்கார்ந்துள்ளனர். இதைதவிர, சிறுவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளது மலைப்பை தருகிறது.
போராட்ட களம்
ஒரு சிறுவனுக்கு 15 வயதுதான் இருக்கும்.. அவன் பெயர் நவ்ஜித் சிங்.. தன் அப்பாவுடன் டெல்லியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான்.. ஸ்கூல் படிக்கும் வயதில் போராட்டத்தில் கலந்து கொண்ட இந்த சிறுவன் சொல்கிறான், "என்னால எவ்வளவு நாட்கள் முடியுமோ அவ்வளவு நாட்கள் டெல்லியிலேயே தங்கியிருப்பேன்... எனக்கு ஸ்கூல் திறக்கும்போது திரும்பி வந்துடுவேன்.. விவசாயிகளுடன் இந்த போராட்டக் களத்தில் நானாகத்தான் பங்கேற்க வந்துள்ளேன்.. எங்க பிரச்சனைக்கு நாங்கள் போராடாவிட்டால், வேற யார் வந்து போராடுவார்கள்?" என்று துணிவுடன் கேட்கிறான் இந்த சிறுவன்!
பாட்டி
இந்த சிறுவன் ஒரு உதாரணம்தான்.. இதுபோல பல மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும், கைக்குழந்தைகளும் ஒரு நீண்ட போராட்டத்திற்கு தயாராகி உள்ளனர்.. நிறைய பாட்டிகளும் இதில் உண்டு. ஒரு பாட்டிக்கு 85 வயசாகிறது.. டெல்லியிலேயே தங்கி விவசாய பெண்களை வீடுவீடாக சென்று அணி திரட்டுகிறார்.. உணவுதானியங்கள், பொருட்களை சேகரிக்கின்றார்.. அந்த பகுதியில், இந்த போராட்டத்தை பற்றி தெரியாத பல இளம்பெண்களுக்கு அதை பற்றி விளக்கமாக எடுத்து சொல்கிறார்.