மத்திய பாஜக அரசுக்கு எதிராக கிளர்ச்சி- டெல்லியில் கடும் குளிரில் 5வது நாளாக விவசாயிகள் போராட்டம்
டெல்லி: மத்திய பாரதிய ஜனதா அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் கிளர்ச்சி டெல்லியில் 5-வது நாளாக இன்றும் தொடருகிறது.
மத்திய பாஜக அரசு அண்மையில் 3 புதிய விவசாய சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது; கார்ப்பரேட்டுகளுக்கானது என்பது குற்றச்சாட்டு.
புதிய விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளது: பிரதமர் மோடி
டெல்லி சலோ போராட்டம்
ஆகையால் புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பல மாதங்களாக போராட்டம் நடைபெற்றது. இதன் அடுத்த கட்டமாக டெல்லி சலோ போராட்டம் அறிவிக்கப்பட்டது.
பெருந்திரள் போராட்டம்
டெல்லியை நோக்கி டிராக்டர்களிலும் நடைபயணமாகவும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பஞ்சாப், ஹரியானாவில் இருந்து புறப்பட்டனர். டெல்லியை நோக்கி விவசாயிகள் முன்னேறாத வகையில் தடுப்புகளை ஹரியானா அரசு அமைத்திருந்தது. இந்த தடுப்புகளை அகற்றிவிட்டு டெல்லியை நோக்கி விரைந்தனர் விவசாயிகள்.
போலீஸ் அடக்குமுறை
விவசாயிகளை தடுக்கும் வகையில் போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் தடியடி நடத்தியும் பார்த்தனர். ஆனால் போலீசாரின் அடக்குமுறைகளை மீறி டெல்லி புராரி பகுதிக்குள் விவசாயிகள் நுழைந்தனர். டெல்லி புராரி மைதானத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டனர். இந்த போராட்டம் 4-வது நாளாக நேற்றும் நீடித்தது.
5-வது நாளாக தொடர் போராட்டம்
டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சாலைகளிலேயே படுத்துறங்கி போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்தனர். இன்று 5-வது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடருகிறது. விவசாயிகளின் இந்த பேரெழுச்சியால் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்துள்ளது.