டெல்லியில் ஏழாவது நாளாக நீடிக்கும் விவசாயிகளின் போராட்டம் -கடும் குளிரிலும் அனலடிக்கும் தலைநகரம்
வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் முன்னெடுத்துள்ள போராட்டம் ஏழாவது நாளாக நீடிக்கிறது. கடுங்குளிரும் விவசாயிகளின் போராட்டத்தால் தலை நகரத்தில் அனலடிக்கிறது.
டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை வீடு திரும்பப் போவதில்லை என்ற வைராக்கியத்துடன் டெல்லியில் குவிந்துள்ளனர் விவசாயிகள். ட்ராக்டர்களில் உணவுப்பொருட்கள், காய்கறிகள், குளிரை தாங்கும் போர்வைகள்,
படுக்கை, தலையணைகள் சகிதமாக டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகளின் ஒரே குறிக்கோள் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பது தான். விவசாயிகளின் கொந்தளிப்பால் அனலடித்துக் கிடக்கிறது தலைநகரம்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களும் தான் விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், உணவு தானியங்கள் உள்ளிட்டவற்றை அத்தியாவசியப் பொருட்கள்
பட்டியலிலிருந்தே நீக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. ஆனால் இந்தச் சட்டங்கள் முழுக்க முழுக்க ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும், அரசு நேரடி கொள்முதலை கனவாக்கும் என்பது விவசாயிகளின் கதறலாகும்.
இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனித்தனியாக மாநிலங்களில் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். அந்த போராட்டங்கள் மத்திய அரசின் செவியை எட்டவில்லை என்பதால் நாட்டின் தலைநகரில் குவிந்துள்ளனர்.
மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநில விவசாயிகள், டெல்லி சலோ என்ற பெயரில் டெல்லியை நோக்கி படையெடுத்தனர். டிராக்டர்களிலும் நடந்தும் பல லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டனர்.
டெல்லியின் எல்லையிலும் டெல்லி புராரி மைதானத்திலும் இரவு பகலாக கடந்த 7 நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிர் ஒருபக்கம், கொரோனா அச்சம் மறுபக்கம் இருந்தாலும் எதற்கும் அசராமல் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
போராட்டத்தின் வீரியம் அதிகரிக்கவே மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல், இணையமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் இணைந்து விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் அச்சங்களை களைய ஐவர் குழுவை அமைக்கலாம் என்றும் அதில் விவசாயிகள் தரப்பில் இடம்பெறும் சங்கங்களின் பிரதிநிதிகளின் பெயர்களை தெரிவிக்குமாறும் அரசு சார்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட அத்தகைய குழுவால் எந்த பயனும் ஏற்படவில்லை என்று விவசாயிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சட்டப்பிரிவுகளில் ஏதேனும் ஆட்சேபம் இருக்குமானால் அதை விரிவாக விளக்கினால் அதை கவனிக்க அரசு தயாராக உள்ளது என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. புதிய சட்டங்களின் நன்மைகள், அவை விவசாயிகளுக்கு தரும் பலன்கள் குறித்து அவர்களிடம் அதிகாரிகள் விளக்கினார்கள். ஆனால், அதனை விவசாயிகள் ஏற்றுக் கொள்ளாத நிலையில், எந்த முடிவும் எடுக்காமல் பேச்சுவார்த்தை முடிவடைந்தது.
விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள் நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என்பதால் மீண்டும் டிசம்பர் 3ஆம் தேதியான நாளை வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிராக்டர்களை கூடாரங்களாக மாற்றியுள்ள விவசாயிகள் சமைத்து சாப்பிட்டு விட்டு தெம்பாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் ஏழாவது நாளாக நீடிப்பதால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மிக முக்கியமான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த கூட்டத்தில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலும் பங்கேற்றனர். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான விவசாயிகளின் கொந்தளிப்பான முழக்கத்தால் தலைநகரம் டெல்லி அனலடித்துக்கிடக்கிறது. விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருவது மத்திய அரசின் கைகளில்தான் உள்ளது.