டெல்லி சலோ... 7-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்- நாளையும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை
டெல்லி: மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் இன்று 7-வது நாளாக கடுங்குளிரிலும் விவசாயிகள் போராட்டம் தொடருகிறது. மத்திய அரசுடன் விவசாய சங்க பிரதிநிதிகள் நாளையும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
மத்திய அரசின் மூன்று புதிய விவசாய சட்டங்களால் தங்களுக்கு பாதிப்பு; கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் பயன் என்பது விவசாயிகளின் கருத்து. ஆகையால் புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெற கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த போராட்டங்களின் அடுத்த கட்டமாக டெல்லி சலோ போராட்டம் அறிவிக்கப்பட்டது. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநில விவசாயிகள், மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் டெல்லி சலோ என்ற பெயரில் டெல்லியை நோக்கி படையெடுத்தனர்.
டிராக்டர்களிலும் நடந்தும் பல லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டனர். டெல்லியின் எல்லையிலும் டெல்லி புராரி மைதானத்திலும் இரவு பகலாக கடந்த 7 நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமூக முடிவு எட்டவில்லை.. போராட்டம் தொடரும்.. டெல்லி விவசாயிகள் திட்டவட்டம்
இதனால் மத்திய அரசு வேறுவழியே இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. 32 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோருடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து ஆராய 5 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கலாம் என யோசனை தெரிவித்தார். ஆனால் இதனை விவசாய சங்க பிரதிநிதிகள் நிராகரித்துவிட்டனர்.
தங்களைப் பொறுத்தவரை மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் கோரிக்கை எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதனால் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் மீண்டும் நாளையும் மத்திய அரசுடன் விவசாய சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.