டெல்லியின் எல்லா நுழைவு வாயிலும் விவசாயிகள்.. போராட்டம் உச்சம், அமித்ஷா கோரிக்கை நிராகரிப்பு
டெல்லி : டெல்லியில் விவசாயிகள் நுழைவு போராட்டம் படுதீவிரம் அடைந்துள்ளது. முதலில் ஹரியான டெல்லி பார்டரில் இருந்து மட்டும் தான் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் வந்து கொண்டிருந்தனர். இப்போது உத்தரப்பிரதேச நுழைவு வாயிலிலும் ஏராளமான விவசாயிகள் அணி அணியாக குவிந்து வருகிறார்கள். போராடும் இடத்தை மாற்ற வேண்டும் என்ற அமித்ஷாவின் கோரிக்கையை விவசாயிகள் நிராகரித்துள்ளனர்.
இப்போது டெல்லியின் எல்லா நுழைவு வாயிலும் சாரசாரையாக ஏராளமான விவசாயிகள் நுழைவதால் பதற்றம் நிலவுகிறது. போராட்டம் படுதீவிரம் அடைந்துள்ளது.
சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று விவசாயம் தொடர்பான சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்நிலையில் திடீர் திருப்பமாக விவசாயிகளுக்கு ஆதரவாக உத்தரப்பிரதேச மாநில விவசாயிகளும் களத்தில் குதித்துள்ளனர்,
டெல்லி போலீஸ்
டெல்லி சலோ என்ற பெயரில் பஞ்சாப் ஹரியானா மாநில விவசாயிகள் பேரணியாக வந்தவர்களை டெல்லி எல்லைக்குள் நுழைய விடாமல் தடுப்பதற்கு போலீசார் ஆரம்பத்தில் கடுமையான முயற்சிகளை எடுத்தார்கள். சாலைகளில் உறுதியான தடுப்புகள் உருவாக்கப்பட்டன ஆனால், பல இடங்களில் விவசாயிகள் சாலைத் தடுப்புகளை அகற்றியபடியே முன்னேறினர்.
புராரி மைதானம்
ஒரு கட்டத்தில் அவர்கள் டெல்லியில் நுழைவதற்கு மத்திய அரசின் உத்தரவிற்கு பின்னர் போலீசார் அனுமதி அளித்தனர். அவர்கள் கூடுவதற்கு வடக்கு டெல்லியில் புராரி மைதானத்தை ஒதுக்கினர். விவசாயிகள் அங்கேயே சமைத்து சாப்பிட்டு, கடும் குளிர், மாசு நிறைந்த காற்றுக்கு மத்தியில் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
போராட்டம் உச்சம்
இப்படிப்பட்ட டெல்லியைச் சுற்றியிருக்கும் பல முக்கிய சாலைகள் வழியாக பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் ஏராளமான விவசாயிகள் டிராக்டர்களில் டெல்லியை நோக்கி வந்து கொண்டே இருக்கிறார்கள். இதனால் டெல்லி காவல் துறை, விவசாயிகளை டெல்லி ஐந்தர் மந்தர் மைதானத்திற்கு மாற்ற தயாராகி வருகிறது. ஆனால் விவசாயிகளோ அந்த இடத்தை விட்டு செல்ல மறுத்து போராடி வருகிறார்கள். போராட்டம் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது.
காசியாபாத்
இந்நிலையில் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகளுக்கு ஆதரவாக உத்தரப்பிரதே மாநில விவசாயிகளும் டெல்லி சலோ போராட்டத்தில் குதித்துள்ளனர். டெல்லி காசியாபாத் நுழைவு வாயிலில் தினமும் பல ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்லும் அந்த சாலையில் 100க்கணக்கான விவசாயிகள் வரத்தொடங்கி உள்ளனர். இப்படி டெல்லியின் எல்லா நுழைவு வாயிலும் சாரசாரையாக ஏராளமான விவசாயிகள் நுழைவதால் பதற்றம் நிலவுகிறது. போராட்டம் படுதீவிரம் அடைந்துள்ளது.
பேச்சுவார்த்தை
இதனால் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அழைத்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் விவசாய சங்கங்கள், டிசம்பர் 3-க்கு முன்பே அரசோடு விவாதிக்க விரும்பினால், விவசாயிகள், உடனடியாக தங்கள் போராட்டத்தை, அரசு குறிப்பிட்ட இடங்களுக்கு மாற்ற வேண்டும். அப்படி மாற்றிக் கொண்டால் அடுத்த நாளே விவசாய சங்கங்களை அரசு சந்தித்துப் பேசும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.
விவசாயிகள் சங்கம்
இந்நிலையில் நிபந்தனையுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அழைப்பை ஏற்க போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் மறுத்துள்ளன. அமித்ஷா எந்த நிபந்தனையும் இன்றி திறந்த மனதுடன் பேச முன் வர வேண்டும் என்று பாரதிய கிசான் யூனியனின் பஞ்சாப் தலைவர் ஜக்ஜித் சிங் தெரிவித்தார். விவசாயிகள் போராடி வரும் புராரி மைதானம் சிறியது. டெல்லியின் வெளிப்பகுதியில் உள்ளது. போராட்டம் தீவிரமாக தொடர்வதால் அரசு விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.