தடுப்பையே அடுப்பா மாத்துவோம்... கடும் குளிரிலும் டெல்லியை தெறிக்க விடும் விவசாயிகள்
கடும் குளிரிலும் விவசாயிகள் டெல்லியில் 5வது நாளாக போராடி வருகின்றனர். காவல்துறையினர் தடுப்பை அடுப்பாக மாற்றி சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
டெல்லி: உணவு, குடிநீர், போர்வை தலையணை சகிதமாக டெல்லியை நோக்கி படையெடுத்துள்ள விவசாயிகள் கடுமையான குளிரிலும் சமைத்து சாப்பிட்டுக்கொண்டு 5 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் அமைத்துள்ள தடுப்புகளை அடுப்பாக மாற்றி விவசாயிகள் ரொட்டி சுட்டு சாப்பிடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
மத்திய பாஜக அரசு சமீபத்தில் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் ரயில்மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். தற்போது ரயில் மறியலை கைவிட்ட விவசாயிகள் டெல்லியை நோக்கி 'டெல்லி சலோ' என்ற போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
டெல்லிக்குள் நுழையவிடாமல் தடுக்க என்னென்னவோ தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டும் முடியாமல் போய்விட்டது. கடைசியில் விவசாயிகள் டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டனர்.
"சிவக்கிறது" டெல்லி: ஒருபக்கம் தொற்று.. மறுபக்கம் குளிர்.. விடாமல் போராடும் விவசாயிகள்!
இது தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று உடனடியாக ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவுசெய்திருக்கிறது. விவசாயிகள் தங்கள் போராட்டத்தை மாநில எல்லையின் நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளவதால் போக்குவரத்து பாதிக்கப்படும். அதனால் போராட்டத்தை பாதுகாப்பான முறையில் மேற்கொள்ள டெல்லி புராரி பகுதியிலுள்ள நிரங்கரி சமகம் மைதானம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார்.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள ராம்லீலா மைதானத்துக்கு பதிலாக, நிரங்கரி மைதானத்தை ஒதுக்கியதால் ஆத்திரமடைந்த விவசாயிகள், டெல்லியின் எல்லையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், தலைநகரான டெல்லியுடன் குருகிராம், காஜியாபாத் மற்றும் ஃபரிதாபாத் ஆகியவற்றை இணைக்கும் மூன்று முக்கிய நெடுஞ்சாலைகளை மறியல் மூலம் முடக்கத் திட்டமிட்டுள்ளனர் விவசாயிகள். விவசாயிகளை தடுக்க ஆங்காங்கே காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.
காவல்துறையினரின் தடுப்புகளை தள்ளி விட்டு அதை அடுப்பாக மாற்றி அதன் மீது தோசைக்கல் வைத்து ரொட்டி சுட்டு சாப்பிட்டு விட்டு விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். கடும் குளிர் ஒருபக்கம், கொரோனா மறுபக்கம் அச்சுறுத்தினாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அசராமல் ஐந்தாவது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர் விவசாயிகள். விவசாயிகளின் போராட்டத்தினால் தலைநகர் டெல்லியே திணறிக்கொண்டிருக்கிறது.