மத்திய அரசை விட சிறப்பான திட்டங்களை செயல்படுத்துகிறது டெல்லி அரசு.. கெஜ்ரிவால் பேட்டி
டெல்லி: வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக டெல்லி திகழ்வதாக, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். எங்களை பார்த்து பிற மாநிலங்கள் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கெஜ்ரிவால் இவ்வாறு கூறியுள்ளார். அந்நிகழ்ச்சியில் மேலும் பேசியுள்ள அவர், ஆம் ஆத்மி கட்சியின் முன்னுரிமை டெல்லிக்கு தான். டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து அளிக்கும் வாக்குறுதிகள் தற்போது தான் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தேர்தல் அறிக்கைகளிலும் இடம் பெற்றுள்ளன.
பிரதமா் மோடி நாட்டின் வளர்ச்சி குறித்து பேசி ஓட்டு கேட்பதை விட்டு, ராணுவ நடவடிக்கைகளை கூறி வாக்கு கேட்கிறார். டெல்லியில் வெறும் 3 எம்.எல்.ஏ-க்களை மட்டுமே வைத்துள்ள பாரதிய ஜனதா, மத்திய அரசின் செல்வாக்கு மூலம் டெல்லியை ஆட்சி செய்ய துடிக்கிறது என சாடினார்.
கூட்டணி கட்சிகளின் துணையோடு ராகுல் பிரதமராவார்... வசந்தகுமார் சொல்கிறார்
நாட்டில் 2-வது அதிக வரி செலுத்துவோராக டெல்லி மக்கள் உள்ளனர். எனவே டெல்லிக்கு கூடுதல் நிதியை ஒதுக்கியிருக்க வேண்டாமா என வினவினார். மத்திய அரசு கொண்டு வந்த மோடி கேர் திட்டத்தை விடவும் சிறப்பானது, தனது அரசு டெல்லி ஏழைகளுக்காக தொடங்கிய மொகல்லா கிளினிக் திட்டம் என கூறினார்.
மேலும் நாட்டில் இம்முறை எங்கும் மோடி அலை எங்கும் வீசுவதாக தெரியவில்லை. மாறாக மோடி அரசை அகற்ற விரும்பும் அலை தான் தற்போது அதிவேகமாக வீசுகிறது என்றும் அவர் கூறினார்.