பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு... தமிழக பிரச்சனைகள் குறித்து பேச்சு
டெல்லி: டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
7 நிமிடங்கள் நடந்த பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமியின் சந்திப்பின் போது அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உடன் இருந்தனர் அப்போது, காவிரி பிரச்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 5 வது பொது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாக கூட்டணி அரசு 2-வது முறையாக பதவியேற்ற பிறகு, முதல் முறையாக நிதி ஆயோக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்ட மத்திய அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில், மேற்குவங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று தெரிகிறது. மாநிலத்திற்கு எந்த நிதி பலனையும் நிதி ஆயோக் ஒதுக்காததால், கூட்டத்தை புறக்கணிப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பிறகு, தமிழகத்திற்கான நிதி தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார். மேலும், மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான அமித்ஷாவை, அவரது இல்லத்திற்கு சென்று முதல்வர் பழனிசாமி தனியாக சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.