பி.கே. வை கட்டி அணைத்த ஏ.கே.. பயங்கர குஷியில் ஆம் ஆத்மி.. கட்சி அலுவலகத்தில் வெற்றி குதூகலம்
டெல்லி: டெல்லியில் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 3-ஆவது முறையாக வெற்றி பெறவுள்ள நிலையில் கட்சி அலுவலகத்துக்கு வந்த பிரசாந்த் கிஷோரை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
இதில் ஆம் ஆத்மி 65 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. இக்கட்சிக்கு தேர்தல் பிரசார வியூகத்தை வகுத்து தந்தவர் பிரசாந்த் கிஷோர்.
இந்த வெற்றி குறித்து பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றிய டெல்லி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி தேர்தலில் வாக்கு சதவீதம்.. தக்க வைத்தது ஆம் ஆத்மி.. தட்டி தூக்கிய பாஜக
இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நேற்று இரவு முதல் தொண்டர்கள் வரத் தொடங்கியுள்ளனர். இதனால் அந்த அலுவலகமே திருவிழா போல் களைக் கட்டியுள்ளது.
கட்சி அலுவலகத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டவர்கள் வருகை தந்தனர். பிரசாந்த் கிஷோர் வந்த போது அவருக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால் அவரை கட்டி அணைத்தார். இருவரும் வாழ்த்துகளையும் நன்றியையும் பரிமாறி கொண்டனர்.