தேவைன்னா.. கலவரத்தை ஒடுக்க ராணுவம் வரும்.. அமித் ஷாவை சந்தித்த பிறகு கெஜ்ரிவால் அதிரடி பேட்டி
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து, வடகிழக்கு டெல்லியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் வெடித்த வன்முறைகள் குறித்து, ஆலோசனை நடத்தினார்.
Recommended Video
டெல்லியில் நேற்று மதியம், சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களிடையே வெடித்த வன்முறை மற்றும் அது சார்ந்த நிகழ்வுகளில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். இதில் போலீஸ் தலைமை கான்ஸ்டபிளும் ஒருவர்.
இந்த நிலையில்தான், அமித்ஷா அழைத்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் கெஜ்ரிவால் பங்கேற்றுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால், டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக், பாஜக டெல்லி மாநில தலைவர், மனோஜ் திவாரி, ராம்வீர் பிதுரியந்த், காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு முன்னதாக, டெல்லி எம்.எல்.ஏ.க்களுடன் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார். நிலைமை குறித்து தான் மிகவும் கவலைப்படுவதாக அப்போது, கூறினார். கூட்டத்திற்குப் பிறகு நடந்த செய்தியாளர் கூட்டத்தில், கெஜ்ரிவால் அனைத்து மக்களும், அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் கெஜ்ரிவால் கூறியதாவது: அரசியலுக்கு அப்பாற்பட்டு, அனைத்து தரப்பும், டெல்லியில் அமைதி திரும்ப ஒத்துழைக்க வேண்டும் என அதில் முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறுகையில், டெல்லிக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு தேவை என்றால், அதிக போலீசார் நியமிக்கப்படுவார்கள் என்று அமித் ஷா தெரிவித்தார். வட கிழக்கு டெல்லி பகுதியில், கிரைம் பிராஞ்ச், பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு, சிறப்பு பிரிவு போலீசாருடன், 35 கம்பெனி அளவுக்கான, துணை ராணுவப்படையும் குவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்.
கலவரத்தை ஒடுக்க ராணுவம் வர வேண்டும் என்று கேட்பீர்களா என்ற நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்த கெஜ்ரிவால், தேவைப்பட்டால், ராணுவத்தை அழைக்கலாம். ஆனால், கூடுதல் போலீசாரை நிறுத்தி, கலவரத்தை கட்டுப்படுத்திவிடுவதாக அமித் ஷா கூறியுள்ளார் என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.
இணை போலீஸ் கமிஷனர் அலோக் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாங்கள் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து வருகிறோம், பிரம்மபூரி, ம ஜ்பூர், சந்த் பாக் மற்றும் பிற பகுதிகளில் போலீஸ் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. எந்தவொரு வன்முறையையும் எதிர்கொள்ளும் அளவுக்கு வலிமையோடு உள்ளோம். அமைதி குழுக்கள், பிற மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றன" என்றார்.